UPI மக்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்குகிறதா? உண்மை என்ன? முழு டேட்டா இதோ!
சென்னை: UPI பணப்பரிவர்த்தனை பற்றி வெளியான சர்வே பல்வேறு உண்மைகளை வெளிச்சம் போட்டுக் கட்ட உதவி செய்துள்ளது.
சமீபத்தில் டெல்லி ஐஐடி எடுத்த சர்வே முடிவுகள் நாட்டில் உள்ள பாமர மக்கள் வரைப் போய்ச் சேர்ந்துள்ளது. ஐஐடி எடுத்த சர்வே மூலம் 74% பேர் டிஜிட்டல் பரிவர்த்தனை (UPI) வந்த பிறகு அதிகமாகச் செலவு செய்து வருவதாகத் தெரியவந்துள்ளது எனக் கூறியிருந்தது.

ஐஐடி டெல்லியில் உதவிப் பேராசிரியரான துருவ் குமார் மற்றும் அவரது இரண்டு மாணவர்களான ஹர்ஷல் தேவ், ராஜ் குப்தா ஆகியோர் இணைந்து UPI மூலம் நடத்தப்படும் பணப்பரிவர்த்தனை பொதுமக்களின் செலவு செய்யும் பழக்கத்தை உண்மையில் மாற்றிவிட்டதா என்பதைக் கண்டறிய ஒரு சர்வேவை நடத்தியுள்ளனர்.
இவர்கள் கூகுள் படிவங்களைப் பயன்படுத்தி 18 வயது அதற்கு மேற்பட்ட வயதுடைய 276 நபர்களிடம் இந்த ஆய்வை செய்துள்ளனர். இந்தக் கணக்கெடுப்பை பல்வேறு தரப்பட்ட வகுப்பினரிடம் எடுத்துள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவில் 74% பேர் யுபிஐ மூலம் செலவு செய்யத் தொடங்கிய பிறகு அதிகமாகச் செலவு செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.

2016 இல் இந்தியாவில் இந்த யுபிஐ பணப்பரிவர்த்தனையானது தொடங்கப்பட்டது. அது கொரோனா தொற்று பரவி வந்த ஊரடங்கு காலம். பணத்தின் வழியாகவும் கொள்ளை நோய் பரவ வாய்ப்பு உள்ளது எனக் கூறப்பட்ட நிலையில் இந்தப் பணப் பரிவர்த்தனையை மக்கள் அதிகம் மேற்கொள்ளத் தொடங்கினர்.
பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் உலகிலேயே இந்தியாதான் அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 46% என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் டெல்லி ஐஐடி கண்களை உருத்த தொடங்கி உள்ளது. ஆனால், இந்த சர்வேவை அவர்கள் மிகக் குறைவான மக்களிடம் மட்டுமே எடுத்துள்ளன.
அதாவது இந்த ஐஐடி மாணவர்கள் வெறும் 276 பேர்களிடம் தான் சர்வே செய்துள்ளனர். இந்தக் குறைவான மாதிரி அளவைக் கொண்டு, டிஜிட்டல் பரிவர்த்தனையால் அதிக செலவு செய்வது உயர்ந்துள்ளதாக ஒரு முடிவை இவர்கள் எட்டி உள்ளனர்.

ஆகவே, அந்த சர்வே பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டுள்ளது என்று குரல் இப்போது ஒலிக்கத் தொடங்கி உள்ளது.
இந்தியாவில் நாணயங்கள் மற்றும் பணம் மூலமே மட்டுமே மக்கள் பல நூற்றாண்டுகளாக தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி வருகின்றன. நம் நாட்டின் வர்த்தகம் என்பது நேரடிப் பணப்பரிவர்த்தனை மூலம் மட்டுமே ஒருவழிப் பாதையில் இயங்கி வந்தது.
அதில்கூட காசோலை மூலம் பரிவர்த்தனை என்பது சில்லறை வர்த்தகங்களில் எளிதில் புழங்க முடியாததாகவே இருந்தது வந்தது. குறைந்தது ஒரு 5 ஆயிரம் அல்லது 10 ஆயிரம் ரூபாய்க்கு மேலாகவே காசோலைகளை வழங்க முடியும். நூறு ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் ஒருவர் காசோலையைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்வதை வங்கிகள் எளிதாக அனுமதிக்கவில்லை.
அதன் பின்பாக வந்த டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு போன்றவை கூட எளிய அளவிலான சில்லறை வர்த்தகத்திற்குள்ளாகக் கால்பதிக்க முடியாத சூழலே இருந்து வந்தது.

அப்படியான ஒரு காலகட்டத்தில்தான் மாபெரும் புரட்சியாக உள்ளே நுழைந்தது Digital payments system. இதைக்கொண்டு ஒருவர் தன் வங்கிக் கணக்கிலிருந்து குறைந்தது 1 ரூபாயை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். அதுவும் நொடிப் பொழுதில் இந்தப் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.
இதற்காக நீங்கள் வங்கி வாசலில் காத்திருக்கத் தேவை இல்லை. காசோலையில் கையெழுத்துப் போட்டு அது பணமாக மாறும் வரை காத்திருக்கத் தேவையில்லை. அதைத்தும் ஒரு மொபைல் போன் மூலம் விரல் நுனியில் நடைபெறுவதற்காக அனைத்து சாத்தியங்களையும் பெற்றுத் தந்தது.
ஆகவேதான் இந்த Digital payments system என்று சொல்லக்கூடிய UPI இந்தியப் பொருளாதாரத்தில் மாபெரும் புரட்சியை உண்டாக்கியது.
ஒரு டீ கடைக்காரர் தனது 2 ரூபாய் சில்லறை வர்த்தகத்தை இதன் வழியே எளிதாக நடத்த ஆரம்பித்தார். எனவே இன்றைக்கு இந்த UPI பரிவர்த்தனை என்பது சந்து பொந்து வரை நீண்டு சென்றுள்ளது.
கீரை விற்பனை செய்யும் பாட்டி முதல் பல்பொருள் அங்காடி வரை இந்த UPI பணப்பரிவர்த்தனையைச் செய்ய முடியும் என்பதே இதன் சிறப்பு. ஆகவே, இளம் தலைமுறை மட்டுமே இருந்து வந்த இந்தப் பரிவர்த்தனை இன்று கடைக்கோடி மக்கள் வரை சென்றடைந்துள்ளது.
எப்படி நாணயத்திற்கு 2 பக்கங்கள் உள்ளனவோ, அதைப்போன்று இந்த UPI பணப்பரிவர்த்தனை முறைக்கு 2 பக்கங்கள் உள்ளன. ஒருவர் தனது கட்டுப்பாட்டில் உள்ள பணத்தைப் பார்த்துப் பார்த்து செலவு செய்யவும் முடிகிறது. அதே நேரம் சேமிப்பில் எவ்வளவு உள்ளது எனத் தெரியாத அளவுக்கு அள்ளி அள்ளி செலவழிக்கவும் முடிகிறது.
இந்த இரண்டுவிதமான போக்குகளையும் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை முறை கொண்டுள்ளது என்பதே உண்மை. அதற்காக மட்டையடியாகப் பலரும் கண் மண் தெரியாமல் செலவழிக்கிறார்கள் என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல என்றே பல பொருளாதார ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இன்னொரு பக்கம் வலுவான ஆதாரங்கள் வைக்கப்படுகின்றன. டெல்லி ஐஐடியில் இந்த சர்வேவில் ஈடுபட்ட மாணவர்கள் ஒரு எக்சல் தாளில் யுபிஐ பரிவர்த்தனைக்கு முன்பாக தாங்கள் செலவழித்த தொகை பதிவு செய்து வந்துள்ளனர்.
அதன்பின்னர் யுபிஐ செலவையும் பதிவு செய்து கணக்கிட்டுப் பார்த்துள்ளனர். பணத்தைக் கொண்டு செய்யப்பட்ட செலவைவிட, யுபிஐ வழியிலான செலவுகள் கூடி உள்ளதை அது நிரூபித்துள்ளது. ஆகவே, இந்த இரண்டையும் கணக்கில் ஏற்பது அவசியம் என்று வாதிடுகிறார்கள் இவர்கள்.
சிலர் பணத்தைக் கொண்டு தேவையானவற்றை வாங்குவதைவிட, க்யூஆர் கோட் மூலம் வாங்குவது மிக எளிதாக உள்ளது. மேலும் வசதியாகவும் உள்ளது என்று சொல்கிறார்கள்.
NPCI வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் ஏப்ரல் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையானது எப்படி வளர்ந்துள்ளது என்பதைப் படம்பிடித்துக் காட்டி உள்ளது.
அதன்படி 2023 ஏப்ரலில் 8,863 மில்லியனாக இருந்த பரிவர்த்தனையானது 2024 ஏப்ரலில் 13,304 மில்லியன் அளவுக்குக் கூடியுள்ளது. இந்த வளர்ச்சி செலவுகள் எந்தளவுக்கு உச்சத்தை எட்டி உள்ளன என்பதை ஆதாரப்பூர்வமாகக் காட்டுகின்றன.
UPI மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் மதிப்பு, ஏப்ரல் 2024இல் கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் கோடியைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது என்கிறது National Payments Corporation of India வெளியிட்டுள்ள தரவுகள்.
ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்பது எளிய வழிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. ஆனால், அது எளிமையாகப் பணத்தைக் கையிலிருந்து பறிக்கவும் வழி செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications