வறுமையிலும் 12ம் வகுப்பு தேர்வில் நல்ல மார்க் வாங்கிய போண்டாமணி மகள்! உயர்கல்வி செலவை ஏற்ற பிரபலம்
சென்னை: நடிகர் போண்டாமணியின் மகள் இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியிலும் அவர் பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று தற்போது எந்த கட்டணமும் இன்றி அவர் கல்லூரியில் படிக்க ஒரு கல்வியாளர் உதவியுள்ளார்.
காமெடி நடிகர்கள் விவேக், வடிவேல் ஆகியோருடன் நகைச்சுவை காட்சிகளில் நடித்தவர் போண்டாமணி. இவர்கள் இருவருக்கும் காமெடிக்கென குழுக்கள் இருக்கும். இவர்கள் எந்த படத்தில் புக்கானாலும் அதில் கிடைக்கும் ஊதியத்தில் அவர்களுக்கு தேவைப்போக மீதி உள்ளதை இவர்களுக்கு ஊதியமாக வழங்குவர்.

அந்த வகையில் போண்டாமணி விவேக்குடன் வடிவேலுடனும் காமெடி செய்துள்ளார். இவர் அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் அண்மையில் போண்டாமணி சாவின் படிக்கட்டின் விளிம்பு வரை தொட்டு விட்டு பத்திரமாக மீண்டுள்ளார்.
போண்டாமணி பருவக் காதல் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்போது சாக்கடையில் விழுவது போன்ற சீன் இருந்தது. அதை தத்ரூபமாக எடுக்க வேண்டும் என்பதற்காக நிஜ சாக்கடையில் போண்டா மணியை விழ வைத்தார்கள். அந்த சாக்கடை தண்ணீரை குடித்துவிட்டதால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு அவருக்கு மூச்சுத் திணறல் இருந்தது.
அப்போது போண்டாமணியின் இரு சிறுநீரகமும் செயலிழந்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் போண்டாமணியை நேரில் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவருக்கு தரமான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கூறியிருந்தார். அது போல் போண்டாமணியை மனோபாலா நேரில் சந்தித்து உதவியிருந்தார்.
பார்த்திபன், தனுஷ் உள்ளிட்டோரும் உதவியிருந்தனர். இதையடுத்து அவருடைய உறவினர் ஒருவரின் சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இதையடுத்து அவர் வீடு திரும்பினார். அவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் போண்டாமணியின் மகள் சாய்குமாரி பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார்.
கடந்த 8 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வந்த நிலையில் அவர் 600-க்கு 400 மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளார். தந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் வீட்டில் வருமானம் இன்றி எத்தனையோ கஷ்டங்களை அந்த குழந்தைகள் சந்தித்திருப்பர். எனினும் இத்தனை ஏழ்மை நிலையிலும் அந்த குழந்தை 400 மதிப்பெண்களை பெற்றுள்ளார். தந்தை முன்பு போல் ஆரோக்கியமாக இருந்திருந்தால் அவர் இன்னும் கூடுதலாக மதிப்பெண்களை பெற்றிருக்கலாம்.
இந்த நிலையில் வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் அவரால் முன்பு போல் தனது குழுவினருடன் வேலை வழங்க முடிவதில்லை. அது போல் விவேக் உயிரிழந்துவிட்டதால் போண்டாமணிக்கு தற்போது வேலைவாய்ப்புகள் இருப்பது போல் தெரியவில்லை. இந்த நிலையில் தனது மகளுக்கு உயர்கல்வி கொடுக்க தயாரிப்பாளரும் வேல்ஸ் இயக்குநருமான ஐசரி கணேஷ் முன்வந்துள்ளதாக போண்டாமணி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போண்டாமணி கூறுகையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு எனக்கு கிடைத்த பரிசாக என் மகள் 12 ஆம் வகுப்பு தேர்வில் 400 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் பிறகு கல்லூரியில் சேர்க்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும் என வேதனையாக இருந்தது. ஆனால் ஐசரி கணேஷ் சார் நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது உங்கள் மகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்தால் எவ்வளவு செலவானாலும் அவரை படிக்க வைக்கிறேன் என உறுதியளித்திருந்தார்.
அவர் அன்று சொன்னதை போல என் மகளின் ரிசல்ட்டை அறிந்தவுடனேயே அவருடைய வேல்ஸ் கல்லூரியில் ஒரு ரூபாய் கூட கட்டணம் வாங்காமல் என் மகளுக்கு பிசிஏ படிக்க சீட் கொடுத்துள்ளார். இப்படி ஒரு நல்ல மனிதர் தெய்வத்திற்கு சமம். இது என் உழைப்புக்கு கிடைத்த வெற்றி, நான் எப்போதும் அவருக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன் என உருக்கமாக பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications