இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை! கருணாநிதி நூற்றாண்டு விழா மேடையில் ஜவாஹிருல்லா விடுத்த கோரிக்கை!
சென்னை: இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பான ஒரு கோரிக்கையை, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையிலேயே கருணாநிதி நூற்றாண்டு விழா மேடையில் ஜவாஹிருல்லா முன் வைத்துள்ளார்.
கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை பின்னி மில் மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மமக தலைவர் ஜவாஹிருல்லா, இஸ்லாமியர்களுக்கும், திமுகவுக்கும் உள்ள பந்தம் குறித்து எடுத்துக் கூறினார். கருணாநிதியால் மூத்த பிள்ளை என்றழைக்கப்பட்ட முரசொலி நாளிதழை முதன்முதலில் அச்சிடப்பட்டது திருவாரூர் கருணை ஜமால் அச்சகத்தில் தான் என்பதை அவர் நினைவூட்டினார்.
அதேபோல் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் நோக்கில் இருக்கையில் இருந்து எழுந்து மைக்கி நோக்கி வரும் போது பள்ளிவாசலில் ஒலித்த பாங்கை சுட்டிக்காட்டி சிலாகித்து பேசினார். அதேபோல் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் கருணாநிதி காட்டிய கருணை இன்று தேவைப்படுவதாக முதல்வர் ஸ்டாலினுக்கு சூசகமான முறையில் ஒரு மெசேஜை பாஸ் செய்தார்.
அதாவது கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை முதல்வர் ஸ்டாலின் விடுதலை செய்ய வேண்டும் என்பதை இப்படி நாசூக்காக கூறினார் ஜவாஹிருல்லா. கருணாநிதியை பொறுத்தவரை பத்தோடு பதினொன்றாக அவரை சாதாரண அரசியல் தலைவராக கருத முடியாது என்றும் 70களில் 'ன்' மிகுதியால் அழைக்கப்பட்டவர்களை 'ர்' மிகுதியால் அழைக்க வைத்தவர் கருணாநிதி என புகழாரம் சூட்டினார்.

அதேபோல் வட இந்தியாவில் இன்னும் பெயருக்கு பின்னால் சாதிகளை போடக்கூடிய அவலம் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் பெயருக்கு பின்னால் பட்டப்படிப்புகளை போட வைத்த பெருமைக்குரியவர் கருணாநிதி என புகழஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications