ஹேப்பி நியூஸ்.. தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு.. வெயிலும் வாட்டி வதைக்குமாம்!
சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிவிப்புகள் கூறுகின்றன.
வடமேற்கு பகுதியில் ஏற்படும் காற்று சுழற்சியின் காரணமாக இந்தியாவின் கிழக்கு பகுதியில் இடி,மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இன்று அஸ்ஸாம், மேகாலயா, அருணாசலபிரதேசத்தில் மழை பெய்யும்.
வங்கக் கடலில் வடமேற்கு காற்று மற்றும் கிழக்கு காற்று தென்னிந்தியா நோக்கி வீசக் கூடும். இதனால் தென்னிந்தியாவில் இன்று இடியுடன் மழை பெய்யக் கூடும். அது போல் தென்னிந்தியாவின் ஒரு சில இடங்களில் மின்னலுடன் கூடிய மழை பரவலாக பெய்யும்.
கர்நாடகத்தின் தென் பகுதியில் உள்ள உள்மாவட்டங்களிலும், கேரளாவில் இன்றும் மாலையும் மழை பெய்யும். தெற்கு அந்தமான் கடலோரம் மற்றும் வங்கக் கடலை ஒட்டியுள்ள இடத்தில் குறைந்த காற்றழுத்தமும் காற்று சுழற்சியும் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ஏற்படும்.
இதனால் வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை ஏற்படும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும். குறிப்பாக கன்னியாகுமரி,திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழையை எதிர்பார்க்கலாமாம். அது போல் ஜார்க்கண்ட, பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, சத்தீஸ்கர், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.
அதே சமயம் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். அது போல் தமிழகத்தின் மற்ற இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் பதிவாகும். வெள்ளிக்கிழமையும் இதே நிலைதான் நீடிக்கும்.