சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து சுக்ரயானுக்கு தயாராகும் இஸ்ரோ! முன்னிருக்கும் சவால்கள் இதுதான்
சென்னை: சந்திரயான் 3 திட்டத்தின் மகத்தான வெற்றி உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளது. இப்படி இருக்கையில், அடுத்ததாக வெள்ளி கிரகத்திற்கு விண்கலனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது.
சூரிய குடும்பத்தில் தற்போது 8 கிரகங்கள் இருக்கின்றன. ஆனால் இதில் பூமியில் மட்டுமே உயிர்கள் வாழும் சூழல் இருக்கிறது. இருப்பினும் பூமியை தவிர உயிர்வாழ்வதற்கான சூழலை உருவாக்கினால் வேறு எந்த கிரகத்திலாவது வாழ முடியுமா? என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்படியாக சனி மற்றும் வியாழன் கிரகங்களின் துணை கோள்கள் சிலவற்றை அடையாளம் கண்டு வைத்திருக்கிறார். அதேபோல என்னதான் முயற்சி எடுத்தாலும் 'இந்த' கிரகங்களில் எல்லாம் வாழவே முடியாது என சிலவற்றை லிஸ்ட் போட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.

அந்த லிஸ்டில் 'வெள்ளி' கிரகமும் ஒன்று. என்னதான் இது சூரியனிலிருந்து ஒரு கிரகம் தள்ளி இரண்டாவது இடத்தில் இது இருந்தாலும், இதுதுான் நமது சூரிய குடும்பத்திலேயே மிகவும் வெப்பமான கிரகமாகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் எனில், ஈயத்தை கொண்டு இந்த கிரகத்தின் தரையில் வைத்தால் அது அப்படியே உருகி ஆறாக ஓடும். அந்த அளவுக்கு இங்கு வெப்பநிலை அதிகம். இப்படி எதுக்குமே தேராத ஒரு கிரகத்தைதான் நமது இஸ்ரோ அடுத்து ஆய்வு செய்ய இருக்கிறது.
ஏற்கெனவே செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலனை அனுப்பிய அனுபவம் இருப்பதால் புதன் கிரகத்திற்கு ஈஸியாக விண்கலனை அனுப்பிவிட முடியும். ஆனாலும் இதில் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன. முதல் சிக்கல் இந்த விண்கலத்தை அனுப்ப நமக்கு இருக்கும் குறைவான நேரம்தான். வெள்ளி, பூமிக்கு பக்கத்தில் வரும்போது விண்கலத்தை அனுப்பினால் செலவு குறைவு. அதேபோல மிஷன் சக்ஸஸ் ஆவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே அடுத்த ஆண்டுக்குள் நாம் இந்த கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்ப வேண்டும். ஒரு வேளை இதை தவறவிட்டுவிட்டால் வெள்ளி பூமியை விட்டு விலகி சென்றுவிடும். அடுத்து நாம் 2031ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.
இரண்டாவது சவால் இந்த கிரகத்தில் உள்ள தரை பரப்பையும், ஆழமற்ற துணை மேற்பரப்பு பகுதியையும் சரியாக படம்பிடிக்க வேண்டும். வெள்ளி கிரகத்தில் அடர்த்தியான வளிமண்டலம் இருக்கிறது. அதில் முழுக்க முழுக்க சல்பியூரிக் அமிலம்தான் இருக்கிறது. இதனால் கிரகத்தின் தரைபரப்பு சரியாக தெரிவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே உயர் தெளிவு திறன் கொண்ட கேமராக்களை பயன்படுத்த வேண்டும். அது சல்பியூரிக் அமிலத்தால் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
சரி இவ்வளவு ரிஸ்க் எடுத்து ஏன் இந்த கிரகத்தை ஆய்வு செய்ய வேண்டும்? என்கிற கேள்வி நமக்கு எழலாம். அதற்கான விடையையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கைவசம் வைத்திருக்கிறார்கள். அதாவது, 'பூமி வெப்பமயமாதல்' என்று நாம் சொல்லும் நிகழ்வு வெள்ளி கிரகத்தில் நடந்துக்கொண்டிருக்கிறது. எனவே வெள்ளி கிரகத்தை பற்றி அறிந்துக்கொள்வதன் மூலம் பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றம் குறித்து நாம் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவேதான் வெள்ளி நோக்கி அடுத்த ஆய்வுகளை நாம் முன்னெடுத்திருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications