ஜேசிபி வாகனங்களில் வேலைக்கு செல்லும் ஐடி ஊழியர்கள்.. குளம் போல மழைநீர் தேங்கிநிற்கும் நிலையில் அவலம்
சென்னை: சென்னையில் இன்னும் பெரும்பாலான பகுதிகளில் குளம் போல மழைநீர் தேங்கியுள்ள நிலையில், தரமணி பகுதியில் ஐ.டி ஊழியர்கள், ஜேசிபி வாகனத்தில் பயணித்து அலுவலகங்களுக்குச் சென்று வருகின்றனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழை நின்று பல மணிநேரம் ஆன பிறகும் கூட, சென்னையின் தாழ்வான பகுதிகளில், இன்னும் மழைநீர் வடிந்தபாடில்லை. தரமணியின் 100 அடி சாலையில் வெள்ளநீர் முழங்கால் வரை தேங்கியுள்ளது. ராஜீவ் காந்தி ஐடி சாலையில் இருந்து வேளச்சேரி செல்லும் முக்கிய சாலையில் உள்ள ரவுண்டானாவை சுற்றி எங்கும் தண்ணீர்மயமாக உள்ளது. தரமணியின் உட்புறப் பகுதிகளில் இன்னும் அதிகமாக மழைநீர் தேங்கியுள்ளது.

அப்பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் எங்கும் மழைநீர் தேங்கி இருப்பதால், 2 நாட்களாக வெளியில் வர முடியாமல் ஏராளமானோர் சிக்கிக் கொண்டுள்ளனர். அப்பகுதிகளுக்கு இன்னும் நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 2 நாட்களாக சாப்பிடாமல், வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகளை வைத்துக்கொண்டு ஏராளமானோர் பரிதவித்து வருவதாக கூறப்படுகிறது.
சில இடங்களில் சாலையில் அந்தப் பக்கத்தில் இருந்து, மறுபுறத்திற்கு மழைநீரை அகற்ற ஜேசிபி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த வகையில் மழைநீரை அகற்றுவதற்கு நீண்ட நேரம் ஆவதால், மக்கள் பெரும் துன்பங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இதற்கிடையே, தரமணி பகுதியில் தங்கியிருக்கும் ஏராளமான இளைஞர்கள், ஐ.டி நிறுவனங்களுக்குப் பணிக்குச் செல்பவர்கள். கடந்த 2 நாட்களாக, அவர்கள் பணிக்குச் செல்லாத நிலையில், இன்று வேலைக்குச் சென்றாக வேண்டிய நிர்ப்பந்தனும் அலுவலகங்களில் தரப்பட்டுள்ளது. இதையடுத்து, வடியாத மழைநீருக்கு மத்தியில் அவர்கள் வேலைக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில், திருவான்மியூர், தரமணி பகுதியில் இருந்து தங்கள் அலுவலகங்களுக்குச் செல்லும் ஐ.டி ஊழியர்கள், குளம் போல தேங்கி நிற்கும் மழைநீருக்கு மத்தியில், ஜேசிபி வாகனத்தில் அமர்ந்து சென்று வருகின்றனர். பெண்கள் உட்பட, ஐ.டி ஊழியர்கள் ஜேசிபி வாகனத்தில், முன்புற பக்கெட்டிலும் அமர்ந்து பயணிக்கும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications