பக்ரீத் பொது விடுமுறை.. சனிக்கிழமை அட்டவணையில் நாளை மெட்ரோ ரயில்கள் இயங்கும்! வெளியானது அறிவிப்பு
சென்னை: நாளை பக்ரீத் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், சென்னையில் மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணையில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மெட்ரோ: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சியால் கடந்த 2015ல் தொடங்கப்பட்டதுதான் இந்த சென்னை மெட்ரோ அமைப்பு. இது தற்போது புளூ லைன் 1 மற்றும் கிரீன் லைன் 2 என இரண்டு பயன்பாட்டு மெட்ரோ பாதைகளையும் மூன்று கட்டுமானப் பாதைகளையும் கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் இதில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மெல்ல இந்த எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்தது.

விடுமுறை: இதனால் பெண்களுக்கு முக்கியத்துவம், விழா கால சலுகை மற்றும் கூடுதல் ரயில்கள் என மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு ஏற்ப சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டு வந்தது. எனவே சென்னை மக்களின் வாழ்க்கையில் மெட்ரோ ரயில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்து வருகிறது. ஆனால் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.
சனிக்கிழமை: எனவே குறைந்த எண்ணிக்கையில், அல்லது வழக்கமான நேர இடைவெளியை விட, கூடுதல் நேர இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை பக்ரீத் விடுமுறை என்பதால், மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணையில் இயக்கப்படும் என்று அறவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது காலை 5 மணிக்கு தொடங்கும் மெட்ரோ சேவை, இரவு 11 மணி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கூடுதல் வழித்தடம்: மெட்ரோ சேவையின் தேவை அதிகரித்திருப்பதால் மேலும் சில வழித்தடங்களில் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டிருக்கின்றன. அதாவது, பர்பிள் லைன் எனப்படும் மூன்றாவது வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டுமாணம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இது சிறுசேரி சிப்காட் II-லிருந்து மாதவரம் பால் பண்ணை வரை செல்லும். இந்த வழித்தடங்களில் மொத்தம் 48 நிலையங்கள் இருக்கும்.
ஆரஞ்சு வழித்தடம்:இவற்றில், 29 நிலத்தடியிலும், 19 உயர்மட்டமாகவும் அமைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து,ஆரஞ்சு லைன் 4 வழித்தடமும் கட்டுமானத்தில் உள்ளது. இது கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து பூந்தமல்லி பைபாஸ் வரை செல்லும். இந்த பாதையில் 28 நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த நிலையங்களில், 10 நிலத்தடியிலும், 18 உயர் மடத்திலும் அமைக்கப்படுகின்றன. ஆரஞ்சு வழித்தடத்தின் மொத்த நீளம் 26 கிமீக்கு மேல் இருக்கும்.
ரெட் லைன்: இறுதியாக ரெட் லைன் 5 வழித்தடமும் கட்டுமானத்திற்கு தயாராகி வருகிறது. மாதவரம் பகுதியை சோழிங்கநல்லூர் பகுதியுடன் இணைக்கும் இந்த முக்கிய மெட்ரோ பாதையில் மொத்தம் 48 மெட்ரோ ரயில் நிலையங்கள் இருக்கும். இதில் 41 நிலையங்கள் உயர்மட்டத்திலும், 1 தரைநிலை மற்றும் 6 நிலையங்கள் நிலத்தடியிலும் அமைக்கப்படும் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.
இந்த வழித்தடம் மாதவரத்தில் தொடங்கி வில்லிவாக்கம், கோயம்பேடு மார்கெட், விருகம்பாக்கம், கோவிலம்பாக்கம் என சுற்றி இறுதியாக சோழிங்கநல்லூர் வந்தடைகிறது. இதில் ஓஎம்ஆர் வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மெட்ரோ பணிகள் 2027ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications