பாஜக கோட்டைகளிலேயே இந்த அடி என்றால்.. தமிழகத்தில் எப்படி தீர்ப்பு வருமோ!
தமிழகத்தில் பாஜக வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான்.
சென்னை: இனிமேலும் தாமரை தமிழகத்தில் மலருமா என்ன?
பாஜகவுக்கு எப்போதுமே ஒரு முகமூடி தேவைப்படுகிறது. அது தன் நிஜமுகத்தை என்றுமே நேராக காட்டியதில்லை. மக்களிடம் பிரபலமும், மரியாதையும் பெற்றவரை முன்னிறுத்தியே தங்களை காரியங்களை சாதித்து கொள்வதைதான் என்றைக்குமே செய்துவரும்.
அப்படித்தான் தமிழகத்திலும் தமிழிசையை பாஜக தலைவராக மாற்றியது. எப்படி அன்றைக்கு வாஜ்பாய் பின்னணியில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி இருந்தார்களோ, அப்படித்தான் இன்றைக்கு தமிழிசைக்கு பின்னால், எச்.ராஜா, வானதி ஸ்ரீநிவாசன், சுப்பிரமணியசாமி போன்றோர் இருக்கிறார்கள்.
குடும்ப மரியாதை
ஒருவேளை எச்.ராஜா போன்றோர் எல்லாம் பாஜக தலைவராக பொறுப்பேற்றிருந்தால், தமிழகத்தில் பாஜக இந்த அளவுக்காவது பேசப்படுமா என தெரியவில்லை. அதற்கு தமிழிசை மீதான மரியாதையும், குடும்ப பின்னணியும்தான் காரணம்.
முழம் சறுக்குகிறார்
எவ்வளவுதான் தமிழிசை தன் கட்சியை இழுத்து இழுத்து கொண்டு வந்து ஜான் நிறுத்தினாலும், எச்.ராஜா, போன்றோர் பேசி முழம் சறுக்கி கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். ஆர்.கே. நகர் தேர்தலின்போது டெபாசிட் வாங்காததற்கு முறைகேடு, பணப்பட்டுவாடா என்று பல காரணங்களை தமிழிசை கூறி சமாளித்தார்.
இந்தி திணிப்பு
ஆனால் தற்போது 5 மாநில தேர்தலின் முடிவுகளை வேறு வழியில்லாமல் ஏற்று கொண்டுள்ளார். மென்று விழுங்கி கருத்தை சொல்கிறார். பாஜகவுக்கு ஏன் இந்த நிலை? தமிழகத்தின் பாரம்பரியத்தை அசைத்து பார்க்க நினைக்கும் பாஜகவின் எண்ணம்தான். எங்கோ காட்டுக்குள் கிடக்கும் மைல்கல்லில் கூட இந்தியை திணித்து எழுத முயற்சிக்கும் வேகம்தான்.
மத மோதல்கள்
சிறுபான்மையினரின் பண்டிகைகளில்கூட அத்துமீறி உள்ளே நுழையும் ஆக்கிரமிப்பு மனோபாவம்தான். இது ஒரு பக்கம் இருந்தாலும், மக்களைப் பாதிக்கிற வாழ்வாதார பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பிவிடலாம் என்று நினைத்து, தொடர்ந்து விஷம் கக்கியும், இன, மதரீதியான மோதல்களை பரப்பி விடும் வேலையை பார்த்து வருகிறார்கள் எச்.ராஜா போன்றோர்.
வருங்கால நிலைமை?
இதற்கெல்லாம் தமிழக பாஜக தலைமை, வாய் பேச முடியாமல் திணறியது... வேற வழி இல்லாமல், தாமரை மலரும் என்றே பீறிட்டு சொல்ல வைத்தது. ஆனால் இப்போது 5 மாநில நிலைமைதான் தமிழகத்திலும் எதிரொலிக்க போகிறது. ஆர்.நகர். தோல்வி, 5 மாநில தேர்தல் தோல்வி போலவேதான் தமிழக மக்கள் மனநிலை வரும் தேர்தலில் இருக்க போகிறது. இதற்கு மனப்பூர்வமாக தமிழக பாஜக தலைமை என்ன செய்ய போகிறது? எப்படி வருங்கால தமிழக தேர்தலை எதிர்கொள்ள போகிறது?
சித்தாந்தமே தவறு
தமிழகத்தின் அத்தனை வாழ்வாதாரப் பிரச்சினைகளிலும் ஒட்டுமொத்தமாக மக்களுக்கு எதிர்திசையில்தான் நிற்கிறது பாஜக. மீத்தேன் திட்டம், ஸ்டெர்லைட், காவிரி என எதை எடுத்தாலும் மக்களுடன் பாஜக நிற்கவில்லை. அடிப்படையே தவறாக, சித்தாந்தமே குளறுபடியாக உள்ள கட்சியில்தான் தமிழிசை சிக்கி கொண்டுள்ளார். அதனால்தான் தொடர்ந்து அவர் விமர்சனங்களை சந்திக்கிறார்.
கோட்டைகளே சரிந்தது
கோட்டைகளாக கருதி மாநிலங்களிலேயே பாஜக இந்த அளவுக்கு சரிந்துள்ளது என்றால் மிகக் கடுமையான கோபத்துடன் மக்கள் உள்ள தமிழகத்தில் எத்தகைய தீர்ப்பை அது சந்திக்கப் போகிறதோ!