கொஞ்ச நாள்தான்.. அதுக்கு அப்பறம் பாருங்க கச்சேரியை! எடப்பாடியை விட்டு பிடித்த பாஜக! மோடி பிளானாமே!
எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்றும், ஓபிஎஸ்ஸை வெறும் அண்ணன் என்றும் அண்ணாமலை அழைத்துள்ளார்.
சென்னை: எடப்பாடிக்கு இப்போது ஈரோடு கிழக்கில் வேண்டுமானால் தற்காலிகமாக சின்னம் கிடைத்து இருக்கலாம். ஆனால் இறுதியில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்கிறார்கள் நம்மிடம் பேசிய பாஜக நிர்வாகிகள் சிலர்.. பாஜகவின் பிளான்தான் என்ன?
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரம் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலுக்காக அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக நிர்வாகிகள் களத்தில் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பெரும் போராட்டத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி ஆதரவு வேட்பாளர் கே. எஸ் தென்னரசு களமிறக்கப்பட்டு உள்ளார்.

பிரச்சாரம்
தற்போது கே. எஸ் தென்னரசு ஈரோடு கிழக்கு தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். வீடு வீடாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் செய்கையில், எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என்று வெளிப்படையாக கூறினார். அதில், அதிமுகதான் இந்த இடைத்தேர்தலில் வெல்ல போகிறது. மக்களுக்கு அதிகம் செய்தது நாங்கள்தான். திமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இடைத்தேர்தல் வெற்றி திமுகவிற்கு ஏமாற்றம் கொடுக்கும். இன்றைய சூழ்நிலையில் அதிமுக தான் பல கட்சிகளை தாங்கி பிடித்து வருகிறது. யாரை நம்பியும் அதிமுக இல்லை.

கூட்டணி தொடரும்
அதிமுகவுக்கு யாரும் உதவவில்லை, அதிமுக தான் பிற கட்சிகளுக்கு உதவுகிறது. மேலும் அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? தற்போது பாஜக எங்கள் கூட்டணியில் தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம். எங்களின் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்றார் எடப்பாடி பழனிசாமி. முன்னதாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கும், பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வமிற்கும், நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறி உள்ளார்.

பாஜக நெருக்கம்
அதாவது எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்றும், ஓபிஎஸ்ஸை வெறும் அண்ணன் என்றும் அண்ணாமலை அழைத்துள்ளார். இதன் மூலம் பாஜக ஆதரவு எங்கே எடப்பாடிக்கு கிடைத்துவிட்டது என்று கேள்வி எழுந்துள்ளது. அதாவது எல்லாம் எடப்பாடிக்கு சாதகமாக இருக்கிறது. பாஜக தலைவர் அண்ணாமலை கூட எடப்பாடி தரப்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். அப்படி என்றால் பாஜக எடப்பாடியை ஒற்றை தலைமையாக ஏற்றுக்கொண்டதா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பாஜக வட்டாரத்தில் சிலரிடம் விசாரித்தோம். அவர்கள் நம்மிடம் தெரிவித்த தகவலில், அதிமுகவில் ஒற்றை தலைமை இருப்பதை பாஜக விரும்பாது.

இரண்டு பேர்
இரண்டு பேருமே அதிமுகவில் இருந்தால்தான் கூட்டணியில் இருக்கும் எங்களுக்கு வாக்கு கிடைக்கும். கூட்டணியில் இருக்கும் பாஜக பலம்பெற வேண்டும் என்றால் அதிமுகவில் வலிமையற்ற இரட்டை தலைமை வேண்டும். அப்போதுதான் நாங்களும் வளர முடியும். வாக்கும் சிதறாமல் இருக்கும். எனவே இப்போது ஈரோடு கிழக்கில் எடப்பாடிக்கு ஆதரவாக பாஜக இருப்பது எல்லாம் வாக்குகள் சிதற கூடாது என்பதற்காகவே. ஈரோடு கிழக்கு எடப்பாடி வலுவாக இருக்கும் தொகுதி என்பதால் அப்படி செய்கின்றனர்.

ஈரோடு கிழக்கு
அதுவே லோக்சபா தேர்தல் என்றாலோ தென் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் வந்து இருந்தாலோ நிலைமை வேறு மாதிரி ஆகி இருக்கும். அப்போது ஓ பன்னீர்செல்வத்தை ஆதரித்து இருப்பார்கள். இப்போது எடப்பாடி கொஞ்சம் வெல்லட்டும் என்று பாஜக விட்டு பிடிக்கிறது.. மோடி தன்னுடன் இருப்பவர்களை கைவிட மாட்டார்.. அவர் ஓபிஎஸ்ஸை கைவிட மாட்டார் என்கிறார்கள் பாஜக தரப்பு நிர்வாகிகள். அதாவது எடப்பாடிக்கு இப்போது ஈரோடு கிழக்கில் வேண்டுமானால் தற்காலிகமாக சின்னம் கிடைத்து இருக்கலாம். ஆனால் இறுதியில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்கிறார்கள். முக்கியமாக ஈரோடு கிழக்கில் அதிமுக தோல்வி அடையும் பட்சத்தில் அதை வைத்தே எடப்பாடியை ஒற்றை தலைமையில் இருந்து ஓரம் கட்டி ஓபிஎஸ்ஸை உள்ளே கொண்டு வரும் காட்சிகள் அரங்கேறும் என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications