ஆரம்பத்திலிருந்து இஸ்ரோவுக்காக பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளையும் நினைவு கூறணும்! -கொங்கு ஈஸ்வரன்
சென்னை: ஆரம்பத்திலிருந்து இஸ்ரோவுக்காக பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளையும் நினைவு கூற வேண்டியது நமது கடமை என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து பதிவு வருமாறு;

விண்வெளியில் குறைந்த செலவில் பல சாதனைகள் படைத்து வரும் இஸ்ரோவுக்கு ஒரு மணிமகுடமாக சந்திரயான் 3-ன் லேன்டர் மெதுவாக நிலவின் தென் துருவ பகுதியில் தரை இறங்கியதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த தருணத்தில் ஆரம்ப கட்டத்தில் இஸ்ரோவுக்காக பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளையும் நினைவு கூற வேண்டியது நமது கடமையாகும்.
தற்போதைய விஞ்ஞானிகள் செய்து வரும் சாதனைகள் பின்வரும் சந்ததிகளுக்கு பெரும் ஊக்கமாக அமையும். சந்திரயான் -1 மற்றும் சந்திரயான் -2 ஆகியவற்றின் மூலம் பெற்ற அனுபவத்தை பயன்படுத்தி சந்திரயான் -3 வெற்றியை இன்று உலகமே வியந்து பார்க்கிறது. சந்திரயான் -1இன் முக்கிய கண்டுபிடிப்பாக நிலவில் நீர் மூலக்கூறுகள் உள்ளதை கண்டுபிடித்த பின் நிலவை நோக்கிய பயணத்தை உலக நாடுகள் மீண்டும் துவக்கியுள்ளது.
சந்திரயான் -2 ஆர்பிட்டரும் சந்திரயான் -3 லேண்டருக்கும் இடையேயான இணைப்பை மீண்டும் ஏற்படுத்தி ஒவ்வொரு அசைவையும் உற்றுநோக்க வைப்பது மட்டுமல்லாமல் ஆர்வத்தையும் அதிகப்படுத்துகிறது. சந்திரயான் -3 லேண்டர் மற்றும் ரோவர் இன்னும் பல அரிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்து உலக விண்வெளி ஆராய்ச்சியில் முன்னோடியாக இருக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக இந்த திட்டத்தில் இணைந்து செயல்பட்ட மற்றும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications