24 லாக்கர்கள், 30 வங்கிக்கணக்குகள் முடக்கம்... வைகுண்டராஜனிடம் முடியாத விசாரணை!
சென்னை: வி.வி.மினரல் குழுமத்தில் 5வது நாளாக வருமான வரித்துறையின் சோதனை நீடிக்கிறது. வைகுண்டராஜனின் வங்கி லாக்கர்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.
வைகுண்டராஜன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான வி.வி. மினரல் குழுமத்திற்கு தொடர்புடைய 24 வங்கி லாக்கர்கள், 30 வங்கி கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியுள்ளது. 3 நாட்களில் விசாரணையை முடிக்க திட்டமிட்ட அதிகாரிகள், 5வது நாளாக தொடர் சோதனையை நடத்திவருகிறார்கள். விவி மினரல் குழுமத்தின் தரப்பில் முறையான ஒத்துழைப்பு இல்லாததே இதற்கு காரணம் என்று வருமானவரித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

100க்கும் மேற்பட்ட இடங்களில் தொடங்கிய சோதனை தற்போது 10 இடங்களாக சுருங்கியுள்ளது. ஆனாலும், கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத ரொக்கம், ஆவணங்கள் குறித்து விவி மினரல் குழுமத்தின் தரப்பில் இன்னும் முறையாக விளக்கம் அளிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்துவரும் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான வைகுண்டராஜனை சொந்த ஊருக்கு வருமானவரித்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
விமானம் மூலம் தூத்துக்குடிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர், சாலை மார்க்கமாக திசையன்விளையில் உள்ள விவி குழுமத்தின் தலைமையிடத்தில் வைத்து வைகுண்டராஜனிடம் விசாரணை நடத்தப்படும் என்று வருமானவரித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வைகுண்டராஜனிடம் விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தபிறகுதான் இந்த சோதனை முடிவுக்கு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
[மிடாஸ் ஆலை எங்கு இருக்கிறது என்பது கூட எனக்கு தெரியாது.. டிடிவி தினகரன் பேட்டி]
விவி குழுமத்தின் லாக்கர்கள், வங்கி கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியுள்ளதால், அந்த குழுமத்தின் கீழ் செயல்பட்டுவரும் நிறுவனங்களில் பணியாற்றிவரும் பணியாளர்கள், தங்களுக்கான தீபாவளி போனஸ், சம்பளம் கிடைக்குமா? கிடைக்காதா என்று தவித்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications