மிடாஸ் ஆலை எங்கு இருக்கிறது என்பது கூட எனக்கு தெரியாது.. டிடிவி தினகரன் பேட்டி
மிடாஸ் ஆலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி: மிடாஸ் ஆலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் அந்த ஆலை எங்கு இருக்கிறது என்பது கூட தெரியாது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கரூரில் அமமுக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: டெண்டர் முறைகேடு விவகாரத்தில் எனக்கு மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது சி.பி.ஐ. விசாரிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்திற்கு ஏன் சென்றிருக்கிறார்? இதன் மூலம் முறைகேடு நடந்திருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது.
[வயசான ரஜினியால பிரச்சாரத்துக்கு போக முடியாது... வம்பிழுக்கும் ராஜேந்திர பாலாஜி!]

செந்தில்பாலாஜி வெற்றி
யாரால் முதல்வர் பதவி கிடைத்ததோ அவருக்கு துரோகம் செய்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி டெபாசிட் வாங்கினால் அரசியலை விட்டே விலகத்தயார் என அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் கூறியுள்ளார். அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் செந்தில்பாலாஜி மீண்டும் மாபெரும் வெற்றி பெறுவார்.

பதில்கூட சொல்லவில்லை
பதவி பறிப்பு தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு நோட்டீஸ் எதுவும் வரவில்லை. கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு அவர்கள் கட்டுப்படுவதாகவும், சட்டப்படி எதையும் எதிர் கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பா.ஜ.க.வை தாக்கி பேசுகிறார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்காக டெல்லி போய் நிற்கிறார். ஆனால் யாரும் அவருக்கு பதில் கூட சொல்லவில்லை.

3 நாட்களில் முடிவு
தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றத்தை தந்ததைவிட மக்களுக்கு அதிக ஏமாற்றம் தந்துள்ளது. அவர்கள் நல்ல தீர்ப்பு வரும், ஆட்சி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் முடிவு செய்யப்படும்.

சம்பந்தமே கிடையாது
மிடாஸ் ஆலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மிடாஸ் ஆலை எங்கு இருக்கிறது என்பது கூட தெரியாது. எனது குடும்பம் என்றால், எனது மனைவி, மகள், அதற்கு அடுத்தபடியாகத்தான் அண்ணன், தம்பி. கட்சிக்குள் தலையிட விடாததால் தான் திவாகரன், பாஸ்கரன் தனியாக கட்சி ஆரம்பித்துள்ளனர்.

நாங்கள் வெற்றி பெறுவோம்
கட்சி வேறு, உறவு வேறு. அ.தி. மு.க. ஆட்சி வீழ்வது உறுதி. துரோகங்கள் ஜெயித்ததாக வரலாறு இல்லை. மக்கள் மன்றத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். என்னைக்கண்டு முதல்வர் மற்றும் ஆட்சியாளர்கள் பயப்படுகிறார்கள். என்னைப் பற்றி பேசவில்லை என்றால் அவர்களுக்கு தூக்கம் வராது. இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications