சீ ஷெல் உணவகங்கள் என்னுடையது அல்ல.. எப்போதோ விற்றுவிட்டேன்.. நடிகர் ஆர்யா பரபரப்பு விளக்கம்!
சென்னை: சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியது. சென்னையில் அண்ணாநகர், வேளச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சீ ஷெக் ஹோட்டல் தன்னுடையது அல்ல என்று ஆர்யா விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. அறிந்தும் அறியாமலும், சர்வம், நான் கடவுள், ஆரம்பம், மதராசப்பட்டினம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்ததன் மூலமாக ஆர்யா அடுத்தக்கட்ட உயரத்தை எட்டினார்.

உணவக தொழில்
அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகை சயீஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன் ஜாலியாக இருந்து வந்த ஆர்யா, திருமணத்திற்கு பின் அதிக பொறுப்புடன் காணப்பட்டார். இதன் காரணமாக நடிப்பு மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட், உணவகம் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளாகவே நடிப்பை விடவும் தொழிலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
சீ ஷெல் ஹோட்டல்
இந்த தொழில்களை தனது தம்பியும், நடிகருமான சத்யா மூலமாக மேற்கொண்டு வருகிறார். இவர் அமர காவியம் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன்பின் சினிமா வாய்ப்புகள் வராத நிலையில், ஆர்யாவின் தொழில்களில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. நடிகர் ஆர்யாவுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் Sea Shell என்ற பெயரில் ஏராளமான உணவகங்கள் இயங்கி வந்தன.
5 இடங்களில் ரெய்டு
இந்த நிலையில் சென்னையில் உள்ள சீ ஷெல் ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இயங்கி 5 ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை நடந்து வருகிறது.
வரி ஏய்ப்பு புகார்
வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு நடந்ததாகவும் நடிகர் ஆர்யா மீது புகார் எழுந்ததால், இந்த சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியது. கொச்சியில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து சோதனை மேற்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது. அண்ணா நகரில் உள்ள கிளையும் மட்டும் 3 வாகனங்களில் வந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்யா விளக்கம்
இந்த நிலையில் வருமான வரித்துறை ரெய்டு தொடர்பாக நடிகர் ஆர்யா விளக்கம் கொடுத்துள்ளார். அதில் சீ ஷெல் ஹோட்டல் தன்னுடையது அல்ல என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பாகவே குன்ஹி மூசா என்பவர் வாங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தரமணியில் உள்ள குன்ஹி மூசாவிடன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications