சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி?
சென்னை: சென்னையில் தேர்தல் சூழல் சூடுபிடித்து வரும் நிலையில், தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மகன்களுக்கு தொடர்புடையதாக கூறப்படும் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியான நிலையில், அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆதரித்து வெற்றி பெறும் வகையில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க திட்டமிடப்பட்டதாக புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.
இந்த புகார்கள் தேர்தல் பறக்கும் படையினருக்கும் வருமான வரித் துறைக்கும் சென்றதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, சென்னை மயிலாப்பூர் பகுதியில் செயல்பட்டு வந்ததாக கூறப்படும் சாலை கட்டுமான டெண்டர் நிறுவனத்தில் முதலில் சோதனை நடத்தப்பட்டது.

அமைச்சர் சேகர் பாபு
இந்த நிறுவனம் அமைச்சர் சேகர்பாபுவின் மகன்கள் ஜெயசிம்மன் மற்றும் விக்னேஷ் ஆகியோருடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. அங்கு வருமான வரித்துறை அதிகாரிகளுடன் தேர்தல் பறக்கும் படையினரும் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.
ஐடி சோதனை
அதனைத் தொடர்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனைகள் விரிவுபடுத்தப்பட்டன. வடபழனி, கீழ்ப்பாக்கம், அடையாறு மற்றும் ஏழுகிணறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 5 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையின் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய பாதுகாப்பு படையினரும் களமிறக்கப்பட்டிருந்தனர்.
முக்கிய ஆவணங்கள்
சோதனை நடைபெற்ற இடங்களில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்த ஆவணங்கள் என்ன தொடர்புடையவை, அதில் என்ன தகவல்கள் உள்ளன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை. சோதனை முடிந்த பின்பே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைமை
தேர்தல் நேரத்தில் திமுக தலைமைக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் ஐடி சோதனை நடைபெற்றதால் அரசியல் வட்டாரங்களில் கூடுதல் பரபரப்பு பெற்றுள்ளது. குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் பதுக்கி வைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடந்ததாக கூறப்படுவதால் மேலும் சில திமுக சீனியர் அமைச்சர்கள், வேட்பாளர்களை குறி வைத்து அடுத்தடுத்து சோதனை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய விசாரணை அமைப்புகள்
அதே நேரத்தில் தேர்தலின் போது இது போன்ற சோதனைகள் எதிர்பார்க்கப்பட்டது தான் என்கின்ற திமுகவினர். ஆரம்பத்தில் இருந்து திமுக முக்கிய புள்ளிகளை குறி வைத்து அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் சோதனை நடத்தின. தேர்தல் நேரத்தில் அவர்களின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் நிச்சயம் அமலாக்கத்துறை வருமானவரித்துறை ரெய்டு நடவடிக்கைகளை நாங்கள் எதிர்பார்த்தே இருந்தோம்.. எனவும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அடித்துச் செல்கின்றனர் திமுகவினர்.
வருமானவரி சோதனை
இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு அவர்களின் மகன்களின் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications