'நிம்மதி அளிக்கிறது..' தமிழகத்தில் 12ஆவது நாளாக குறைந்த கொரோனா..முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவது நிம்மதி தருவதாகக் கூறியுள்ள முன்னாள் சாகாதார் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவலின் 2ஆம் அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதிகபட்சமாகத் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரம் வரை சென்றது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பத் தொடங்கின.

தமிழ்நாடு கொரோனா பாதிப்பு
அதைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கடந்த மே 24ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும், ஜூன் 7ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கிற்குப் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்து வருகிறது. 12ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்து மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறைந்திருந்தது. நேற்று மாநிலத்தில் 25317 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவது நிம்மதி அளிப்பதாக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விராலிமலை எம்எல்ஏவான விஜயபாஸ்கர் இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார். அங்குச் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

நிம்மதி தருகிறது
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து குறைந்து வருவது நிம்மதி அளிக்கிறது. அதேநேரம் மாநிலத்தில் 100க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான மருந்துகளைப் பெற்று உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம்
ஏற்கனவே செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நாங்கள் சில நடவடிக்கைகளை எடுத்தோம். இப்போது முதல்வரும் மீண்டும் அதைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதுதான் இப்போது தமிழ்நாட்டிலுள்ள அனைவரது விருப்பமாக உள்ளது. மத்திய சுகாதாரத் துறை செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தில் விரைவாகத் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications