"மாரிமுத்துவின் 2 குழந்தைகளை 12வது வரை படிக்க வைத்தது நடிகர் அஜித்குமார் தான்".. சகோதரர் பேட்டி
சென்னை: "மாரிமுத்துவின் 2 குழந்தைகளை 12th வரை படிக்க வைத்தது நடிகர் அஜித்குமார்தான்" என மறைந்த நடிகர் மாரிமுத்துவின் சகோதரர் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
நடிகரும் இயக்குனமான மாரிமுத்து மறைந்தநிலையில் அவரை பற்றி பல்வேறு தகவல்களை ஊடகவியலாளர்கள் மற்றும் சினிமா பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மாரிமுத்து குறித்து அவரது சகோதரர் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது செய்தியாளர், எந்த சூழ்நிலையில் இருந்து, இந்த நிலைக்கு வந்துள்ளார் என கேட்டார். அதற்கு பதில் அளித்த மாரிமுத்துவின் சகோதரர், "ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம் தான் சார். இப்ப தான் முன்னுக்கு வந்தார். ரொம்ப போராடி மேலே வந்தார். நல்ல வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த போது இறைவன் கூப்பிட்டுக் கொண்டார். இதை நாங்கள் தாங்கித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.. அதனால் இழப்பு தான்.. எங்களுக்கும் இழப்பு தான். அவருடைய சினிமா துறைக்கும் இழப்பு தான். நாளைக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு பண்ணலாம் என இருக்கிறோம்.
எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். நாங்கள் அண்ணன் தம்பி 8 பேர்.. அப்பா விவசாயி..எல்லாரையும் பால்டெக்னிக், டிப்ளமோ என நல்லா படிக்க வைத்தாரு.. அப்பா இறந்துட்டாரு.. அம்மா இருக்காங்க.. தொடக்க காலத்தில் மாரிமுத்து பீல்டுக்கு வந்த போது ரொம்ப கஷ்டப்பட்டாரு.. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு தான் முன்னுக்க வந்திருக்காரு.. ஆனால் இவருடைய திறமையை பார்த்து விட்டு எல்லாரும் உதவி செய்வார்கள்.. சினிமா துறையில் எல்லாருமே உதவி செய்வாங்க.. முருகதாஸ், எஸ்ஜே சூர்யா, பாரதிராஜா பையன் மனோஜ் போன் பண்ணுனா போதும்,, வீட்டில் வந்து காசு கொடுத்திட்டு போவாரு..
நடிகர் மாரிமுத்துவின் பிள்ளைகளை படிக்க வைத்தது நடிகர் அஜித்குமார் தான்.. அவரது இரண்டு குழந்தைகளையும் பிளஸ் 2 வரை படிக்க வைத்தது அஜித்குமார் தான்.. வாலி படத்தில் இருந்து அஜித் பழக்கம். சினிமா துறையில் மாரிமுத்துவுக்கு நல்ல பெயர் உள்ளது. சொந்தமாக கண்ணும் கண்ணும்,புலி வால் என இரண்டு படம் இயக்கினார். ஆனால் கமர்ஷியலாக போகவில்லை..
மிஷ்கின் தான் இவரை நடிக்க வைத்தார். உங்களுக்குள் ஒரு நடிகர் இருக்கிறார் என அழைத்தார். அதிலிருந்து மாரிமுத்து பிக்கப் ஆகிகிட்டாரு..
அதன்பிறகு இயக்குனர் பணியை விட்டுவிட்டார். இப்போது தான் மேலே வந்து கொண்டிருந்தார்.
நடிகராக முத்திரை பதித்த அவருக்கு, நல்ல படங்கள் எடுத்தும் ஓடவில்லையே என்ற வருத்தம் இருந்தது. கண்ணும் கண்ணும் மிகவும் நல்ல படம்.. ஓடவில்லை என்ற வருத்தம் இருந்தது. ஆனால் அதற்கு தகுந்தாற் போல் மாற்றிக்கொண்டார். எதில் பிழைக்க முடியுமோ, அதில் பிழைப்போம் என வந்துவிட்டார். பிடிவாதமாக இல்லை. எது நமக்கு வருமோ அதில் வந்துவிட்டார்." என மாரிமுத்துவின் சகோதரர் கூறினார்.












Click it and Unblock the Notifications