"இது ஒரு பிளாக் மெயில் நடவடிக்கை" - தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த திருமாவளவன்
சென்னை: தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல் தமிழகத்துக்கு நிதி தர முடியாது என்ற அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு பிளாக் மெயில் நடவடிக்கை என்றும் கண்டித்துள்ளார்.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் காசியில் கொடுத்த பேட்டி மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. அவர் எந்த அளவுக்கு தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்களின் மீதும் வெறுப்புணர்வை கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு விமர்சனத்தோடு அணுகுகிறது. தமிழ்நாட்டு மக்களும் அந்த விமர்சனத்தை முன்வைக்கிறோம்.

அதைப் பொருட்படுத்த அவர்கள் தயாராக இல்லை. ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினோம். அப்போதே அவர் மிகவும் பிடிவாதமாகத்தான் பதில் கூறினார்.
இன்றைக்கும் அதே நிலைப்பாட்டில் அவர் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேசிய கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்வது, நடைமுறைப்படுத்துவது வேறு. அதுதொடர்பான விவாதங்கள் வேறு. ஆனால், அதை ஒரு நிபந்தனையாக வைத்து வழக்கமாக கொடுக்கப்பட்டு வந்த சர்வ சிக்ஷ அபியான் என்கிற கல்வித் திட்ட நிதியை நிறுத்தி வைப்பது ஒரு பிளாக் மெயில் நடவடிக்கை உள்ளது.
இந்தப் போக்கை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இல்லையெனில் தமிழக மக்கள் அவர்களுக்கு உரிய நேரத்தில் உரிய பாடத்தை புகட்டுவோம் என்று எச்சரிக்கையாகவே கூறுகிறோம். தேசிய கல்விக் கொள்கையை இந்திய ஒன்றிய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கு இருக்கிறது. என்றாலும் கூட அந்த கல்விக் கொள்கையில் முரண்பாடுகள் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும், அதற்கான அதிகாரமும் மாநில அரசுகளுக்கு இருக்கிறது.
மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதில்லை என்பது நீண்டகாலமாக இருக்கிற ஒன்று. ஜவஹர்லால் நேரு ஹிந்தி அல்லாத பிற மொழி பேசும் மாநிலங்களின் மீதும் அவர்கள் விரும்புகிற வரை இந்தியை எக்காரணம் கொண்டும் திணிக்க மாட்டோம். அதுவரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக இருக்கும் என்று வாக்குறுதியை தந்திருக்கிறார். அது இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்கிறது.
எனவே, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திட்டமிட்டு வலிந்து அவர்கள் திணிப்பது ஏன். தமிழ்நாட்டில் இந்தியை விரும்பி படிப்பவர்களை நாம் தடுப்பதில்லை. தமிழகத்தில் ஏராளமான இடங்களில் இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. பிரச்சார சபாக்களை தொல்லை செய்வதில்லை. ஆனால், அரசின் கொள்கையாக அதனை நடைமுறைப்படுத்துவது அவர்களுக்கு உள்நோக்கம் உள்ளது என்பதை உறுதிப் படுத்துகிறது.
எனவேதான் தேசிய கல்விக் கொள்கையில் இருக்கும் முரண்பாட்டை தமிழக அரசு சுட்டிக் காட்டுகிறது. அதில் மும்மொழிக் கொள்கை மட்டுமல்ல மேலும் சில முரண்பாடுகள் இருக்கின்றன. மாநில கல்வி பாடத்திட்டங்களை வரையறுக்கிற அதிகாரம் கூட மாநில அரசுக்கு இல்லை. அப்படிப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் ஏற்க முடியாது என்பதைத்தான் தமிழக அரசு சுட்டிக் காட்டுகிறது.
இது கொள்கை தொடர்பான ஒரு முரண்பாடு. இதனை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று திணிக்கிற முறை ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை. இதனை மிக வன்மையாக கண்டிக்கிறோம். திமுக கூட்டணி இதுகுறித்து விரிவாக விரைந்து விவாதிக்க வேண்டும். முதலமைச்சர் இதுகுறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications