ஸ்டாலின் பொங்கு புகழ் பெற்று வாழ வேண்டும்! வாழ்த்தோடு, துஆ செய்யும் ஐ.யூ.எம்.எல். காதர் மொகிதீன்!
ஸ்டாலினுக்கு முதல் ஆளாக 2 நாட்களுக்கு முன்பே பிறந்தநாள் வாழ்த்து கூறிய காதர் மொகிதீன்.
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் நாளை 70வது வயதில் அடியெடுத்து வைக்கும் நிலையில், முதல் ஆளாக 2 நாட்களுக்கு முன்பே பிறந்தநாள் வாழ்த்துக் கூறி கவனம் ஈர்த்திருக்கிறார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன்.
ஸ்டாலின் பொங்கு புகழ் பெற்று வாழ வேண்டும் என வாழ்த்தியுள்ள அவர் மார்ச் 1 என்பது சமூகநீதியின் பேரொளி வீசும் தினம் என புகழாரம் சூடியுள்ளார்.
முரசொலிக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஸ்டாலினை சிங்கத் தளபதி, தங்கத் தளபதி என்றெல்லாம் தனது வாழ்த்தில் புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:

70வது பிறந்தநாள்
''தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், வரும் 2023 மார்ச் முதல் நாளில் தனது 70-வது அகவையில் வெற்றிப் பயணத்தை தொடங்குகிறார்.
தளபதி அவர்கள் வாழும் காலமெல்லாம் பொங்கு புகழ் பெற்று வாழ்ந்திட வாழ்த்துகிறோம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அடியொற்றி ஒவ்வொன்றையும் சிந்தித்து பயனுடைமை கருதி நேர்த்தி மிகுந்த முடிவெடுத்து பகுத்தறிவு சூரியன் பெரியார் அவர்களையும் நல்லோர் எல்லோரும் நாள்தோறும் போற்றி வந்தப் பேரறிஞர் அண்ணா அவர்களையும் தனது தத்துவப் பயணத்தில் முன்னிறுத்தி தனது 'திராவிட மாடல்' நல்லாட்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.''

திருப்புமுனை உருவாக்கும் முயற்சி
''இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தமிழ்நாட்டு 'திராவிட மாடல்' ஆட்சியின் மாட்சியைப் போற்றுவதைப் பார்க்கிறோம்.அகில இந்திய கூட்டாட்சியை நிலைநிறுத்தும் சமூக நீதிக்கொள்கையை தெளிவாக பிரகடனம் செய்து இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனையை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.''

''சிங்கத் தளபதி''
''வரும் மார்ச் 1-ஆம் நாள் தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரையில் தங்கத் தமிழகத்தின் சிங்கத் தளபதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினம் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் சமூகநீதியின் பேரொளி வீசும் தினமாகவும் திகழ்கிறது என்றே நம்புகின்றனர்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழாக ஒளிர்ந்தார்; தமிழுக்காக வாழ்ந்தார்; தரணியெங்கும் தமிழின் சிறப்பும் பெருமையும் அங்கு இங்கு என்னாதபடி எங்கும் பரவிட வேண்டும் என்னும் இலட்சியத்தோடு வாழ்ந்து காட்டினார்.''

பொங்கும் புகழ்
''முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் இலட்சியத்தை தனது இதயத்தில் ஏந்தி வாழும் நாளெல்லாம் தமிழுக்காகவும் தமிழகத்தின் மக்களுக்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொங்கும் புகழுக்குரியவராகப் பூவுலகம் போற்ற பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.''












Click it and Unblock the Notifications