நனவாகிறதா காயிதே மில்லத் கனவு! முஸ்லிம் லீக் கட்சிக்கு ஆட்சியில் பங்கு? அமைச்சர் ஆகிறார் ஷாஜகான்?
சென்னை: தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியில் பாபநாசம் உறுப்பினர் ஏ.எம் ஷாஜகான் அமைச்சர் ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஐயூஎம் எல் கட்சி தலைமை தீவிர பரிசீலனையில் ஈடுபட்டுள்ளதாகவும், நாளை இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் 59 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. தவெகவுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியும் விஜய்யின் அமைச்சரவையில் இடம்பெறுகிறது. காங்கிரஸ் சார்பில் 2 அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைமை மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியும் இதனை உறுதி செய்துள்ளனர். இதன்படி கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர். இதேபோல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும் அமைச்சர் பதவி வழங்க விஜய் விரும்பியுள்ளார். இதனை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் உறுதிப்படுத்தினார்.
இதற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி முதலில் விருப்பம் இல்லை என கூறியது. எனினும் நாளை ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கூறியது. இந்த நிலையில் பாபநாசம் தொகுதி உறுப்பினர் ஏ எம் ஷாஜகானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் அமைச்சரவையில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இடம்பெற்றால், காயிதே மில்லத்தின் நீண்ட நாள் கனவு நினவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. காயிதே மில்லத் முகமது இஸ்மாயில், தமிழக முஸ்லிம் அரசியலில் முக்கிய தலைவராக திகழ்ந்தவர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை தமிழகத்தில் வலுப்படுத்திய அவர், முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் பிரதிநிதித்துவமும் ஆட்சியில் பங்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டார்.
குறிப்பாக தமிழக ஆட்சியில் முஸ்லிம் லீக் கட்சி இடம்பெற்று, சமூகத்தின் குரல் நேரடியாக அமைச்சரவையில் ஒலிக்க வேண்டும் என்பது அவரது நீண்டநாள் அரசியல் கனவாக கருதப்படுகிறது. தற்போது தவெக அமைச்சரவையில் ஐயுஎம்எல் இடம்பெற வாய்ப்பு உருவாகியிருப்பதால், "காயிதே மில்லத்தின் கனவு நனவாகும் சூழல்" எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications