சசிகலாவால் எனக்கும் கணவர் உயிருக்கும் ஆபத்து! போயஸ் தோட்ட வீட்டை அபகரிக்க முயற்சி.. ஜெ.தீபா பரபரப்பு
சென்னை: சசிகலாவால் தனக்கும் தனது கணவரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான போயஸ் தோட்ட இல்லமானது அரசுடமையாக்கப்படும் என அதிமுக ஆட்சியில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவும் மகன் ஜெ.தீபக்கும் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து ஜெயலலிதாவின் வாரிசுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் தீபா, தீபக் இடையே பிரச்சினை நிலவி வருவதால் தீபாவை தீபக் போயஸ் தோட்ட வீட்டுக்குள் செல்ல அனுமதிப்பதில்லை என குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார் தீபா.
இந்த நிலையில் 77ஆவது சுதந்திர தினத்தின் போது தனது அத்தையின் வீட்டில் மூவர்ணக் கொடியை ஏற்ற தனது கணவர் மாதவன், மற்றும் ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார். அங்கு அவர்களை தீபக் தடுத்து நிறுத்தினார். ஆனாலும் இதையும் மீறி தீபா போயஸ் தோட்டத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். இந்த நிலையில் போயஸ் தோட்டத்தில் ஜெயா டிவி கட்டட சுற்றுச்சுவர் அருகே ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் தினந்தோறும் வழிபட்டுவிட்டுதான் ஜெயலலிதா போயஸ் தோட்டத்தை விட்டே வெளியே செல்வார். அது போல் விநாயகர் சதுர்த்தி நிகழ்வெல்லாம் விமரிசையாக நடைபெறும். இந்த கோயிலில் 20 ஆண்டு காலமாக பூஜை செய்து வருகிறார் திநகர் அருளாம்பாள் தெருவை சேர்ந்த ஹரிஹரன் என்ற குருக்கள். இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று போயஸ் தோட்டத்தில் உள்ள கோயிலில் பூஜை செய்ய வந்த ஹரிஹரனுடன் தீபாவுக்கு பிரச்சினை ஏற்பட்டது.
தீபாவும் மாதவனும் தன்னை பூஜை செய்யவிடாமல் தடுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தீபா மீது ஹரிகஹரன் புகார் அளித்துள்ளார். மேலும் பிள்ளையாரின்வெள்ளிக் கீரிடத்தையும் பறிக்க முயன்றதாக ஹரிஹரன் தீபா மீது புகார் அளித்தார்.அவர் பூஜை செய்வதற்கான செலவையும் மாத ஊதியத்தையும் சசிகலா கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை ஜெ.தீபா சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சசிகலாவின் தூண்டுதலால் குருக்கள் என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார். ஹரிஹரன் என்னை ஒருமையில் பேசினார். சசிகலா போயஸ் தோட்ட இல்லத்தை அபகரிக்க முயற்சிக்கிறார். சசிகலாவால் எனக்கும் எனது கணவரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என ஜெ.தீபா தெரிவித்தார். மேலும் கொடநாடு கொலை விவகாரத்தில் சசிகலாவின் குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாகவும் ஜெ.தீபா புகார் அளித்திருந்தார்.












Click it and Unblock the Notifications