ஜாக்டோ-ஜியோ மீண்டும் போராட்ட அறிவிப்பு.. வரும் 7ம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதம்
சென்னை: தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில் வரும் 7ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும், தொகுப்பு ஊதிய பணியாளர்களை நிரந்தரம் செய்து அவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நடந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அரசு ஊழியர்களுக்கு சாதகமாக தீர்ப்பு தரவில்லை. இதனால் போராட்டத்தை தொடர்ந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு எச்சரித்து. மேலும் மறியலில் ஈடுபட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பலருக்கு இடமாற்றம் அளித்தும் உத்தரவிட்டது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் 29-ம் தேதி முதல் பணிக்கு திரும்பினர்.
இந்நிலையில், மீண்டும் வரும் ஜூலை 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது,
தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகிகளை அழைத்துப்பேச வலியுறுத்த வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.