ஜெகஜீவன்ராம் டூ முர்மு வரை; மாயாவதி டூ சரண்ஜித் வரை! தமிழ்நாட்டில் ஏன் தலித் முதல்வர் இல்லை?
சென்னை: தமிழ்நாட்டில் தலித் ஒருவர் ஏன் முதல்வராக வர முடியவில்லை? திருமாவளவன் கூறு கருத்து சரிதானா? கள யதார்த்தம் என்ன சொல்கிறது? இந்தியா முழுமைக்கும் எத்தனை தலித் தலைவர்கள் முதல்வர்களாக வந்துள்ளனர்?
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் வகையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருப்பதாகவும், பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றது.

அதில் பேசிய திருமாவளவன், "தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள் வரும் போகும் ஆனால் ஒருபோதும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராக முடியாது. சாதி ஒழிப்பே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நோக்கம். அதில் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் தன் பின்னால் வாருங்கள்" என்று பேசி இருந்தார். அவர் தலித் ஒருவர் முதல்வராக வர முடியாது என்று கூறிய கருத்து பற்றி இப்போது விவாதமாகப் பற்றி எரிந்து வருகிறது.
இந்தியாவின் துணைப் பிரதமாரக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜெகஜீவன் ராம் இருந்துள்ளார். மக்களவையில் பாலயோகி, மீரா குமார் ஆகியோர் சபாநாயகராக இருந்துள்ளனர். இந்தப் பட்டியலில் தலித் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன், ராம்நாத் கோவிந்த், திரெளபதி முர்மு ஆகியோரை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீகாரில் ராம் சுந்தர் தாஸ், போலா பாஸ்வான் சாஸ்திரி ஆகியோர் முதல்வராக இருந்துள்ளனர். உபியின் முதல்வராக மாயாவதி இருந்துள்ளார். இவர் தலித் முதல்வர் மட்டுமல்ல, இந்தியாவின் முதல் பெண் முதல்வர் இவர்தான். ராஜஸ்தானில் ஜகன்நாத் பஹாடியா, பஞ்சாபில் சரண்ஜித் சிங் சென்னி எனப் பல தலித் முதல்வர்கள் இருந்துள்ளனர்.

ஆனால், சமூகநீதி, பெரியார் மண் என்று பேசும் தமிழ்நாட்டில் தலித் ஒருவர்கூட முதல்வராகப் பதவிவகித்ததில்லை. ஏன் இந்த நிலை? திருமாவளவன் கருத்தின் பின்புலம் என்ன? என்பது பற்றி பத்திரிகையாளர் பிரியன் சில விளக்கங்களை அளித்துள்ளார். அவர், "திருமாவளவன் சொல்வதைப்போலத் தமிழ்நாட்டில் தலித் ஒருவரை முதல்வராக ஏற்றுக் கொள்ள மனநிலை மக்களுக்கு இல்லை என்பது உண்மைதான். ஆனால், நாடு முழுவதும் இந்தக் கருத்து உண்மையானதல்ல.
தமிழ்நாட்டுக்கு வேண்டுமானால் பொருந்திப்போகலாம். கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி தலித் வகுப்பைச் சேர்ந்தவரை முதல்வராக்கி இருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தில் தாமோதராம் சஞ்சீவையா இருந்திருக்கிறார். பீகாரில் ராம் சுந்தர் தாஸ் இருந்துள்ளார். சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சரண்ஜித் சிங் சென்னி முதல்வராகி இருக்கிறார். இப்போது காங்கிரஸ் தேசிய தலைவராகப் பட்டியலினத்தைச் சேர்ந்த கார்கேதான் இருக்கிறார்.
அதைப் போன்று தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் முதல்வராக முடியுமா என்றால் கள யதார்த்தம் இல்லை என்றே சொல்கிறது. திமுக, அதிமுக, பாஜக உட்பட எந்தக் கட்சியின் தலைமை பொறுப்பிலும் தலித்துகள் இல்லை. சீமான், விஜய் எனப் பார்த்தாலும் பட்டியலினத் தலைவர்கள் யாரும் இல்லை. கிருஷ்ணசாமி, திருமாவளவன் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் அளவுக்கு வலுவானதாக இல்லை. கடந்த கால ஆட்சியில் ஜெயலலிதா அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவரைச் சபாநாயகராகக் கொண்டு வந்தார். திமுகவில் பரிதி இளம்வழுதியை துணைச் சபாநாயகர் அளவில் உட்கார வைத்தார்கள்.

திருமாவளவன் தலித் முதல்வராக வர முடியாமல் இருப்பதற்கு நாடாளுமன்றம் ஒரு காரணம் என்கிறார். அதை எப்படிச் சொல்கிறார் எனப் புரியவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தலித் முதல்வராக முடியாது என சொல்லவில்லை. அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆகவே, எதை வைத்து திருமாவளவன் அப்படிப் பேசினார் என உண்மையாகவே புரியவில்லை.
திருமாவளவன் திமுக மீது தங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்கிறார். திமுக ஒரு சமூகநீதிக்கான இயக்கம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இடஒதுக்கீட்டில் திமுகவும் அதிமுகவும் எப்போது சரியான பார்வையைக் கொண்டிருந்தன. ஆனால், அதேசமயத்தில் திமுக ஒரு தலித்தை முதல்வராக முன்வைக்குமா என்பது மிகப்பெரிய சந்தேகம்தான். மதிவாணன், கயல்விழி செல்வராய் போன்ற தலித் தலைவர்கள் உள்ளனர். அவர்களுக்கு முக்கியமான துறை ஒதுக்கப்பட்டுள்ளதா? என்றால் இல்லை. இருந்தாலும் சத்தியவாணி முத்து, ஆ.ராசா போன்றவர்களுக்கு திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எழும்பூரில் நின்று வெற்றிபெற்றுள்ள பரந்தாமன் ஒரு திறமையானவர். அவருக்கு ஏன் திமுக நல்ல இலாக்காவை இதுவரை கொடுக்கவில்லை என்பதே புரியாத புதிராக உள்ளது" என்கிறார்.
தமிழ்நாட்டில் இதுவரை முதல்வராகப் பதவியில் அமர்ந்தவர்கள் பலர் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். விதிவிலக்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் போன்றவர்கள் முதல்வராகி உள்ளனர். இந்த இருவரும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்கள் இல்லை. நியமன முதல்வர்கள்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எனப் பலர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

அதற்குக் காரணம், பெரும்பான்மை சாதியைச் சேர்ந்தவர்கள் முதல்வராக வந்துவிட்டால் பிற பெரும்பான்மை சாதியினருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடும் என மக்கள் நினைக்கிறார்கள். ஆகவே, பெரும்பான்மை சாதியைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து சிறுபான்மைக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறார்கள் என்ற ஒரு பார்வையும் சாதிய அமைப்பு பற்றிய நடத்தப்பட்ட ஆய்வு வட்டாரம் முன்வைக்கின்றது.












Click it and Unblock the Notifications