சாதி சார்பற்றவர்.. சூர்யாவை விமர்சிக்க கூடாது- அன்புமணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கடிதம்
சென்னை: நடிகர் சூர்யா ஜாதி, மத சார்பற்றவர், அவரை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பாமக எம்பி அன்புமணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கடிதம் எழுதி உள்ளது.
ஜெய் பீம் படம் தொடர்பான சர்ச்சைகள் காரணமாக நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாமகவினர் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். படத்தில் குறிப்பிட்ட ஜாதியை குறிப்பது போல காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி பாமகவினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறையில் நடிகர் சூர்யாவின் வேல் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டம் செய்தனர். அதோடு மயிலாடுதுறைக்கு சூர்யா வரும்போது அவரை தாக்கும் நபர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பாமக மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வழக்கு
இன்னொரு பக்கம் ஜெய் பீம் பட விவகாரத்தில் வன்னியர்களை அவமதிக்கும் காட்சிகளை நீக்கி 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வன்னியர் சங்கம் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் மன்னிப்பு கேட்காவிட்டால், ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகாவுக்கு வன்னியர் சங்கம் சார்ப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆதரவு
இந்த நிலையில் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை களமிறங்கி உள்ளது. அதன்படி ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் இருக்கும் ஒரு காட்சியை அகற்றும்படி நீங்கள் கோரிக்கை வைத்து இருந்தீர்கள். தங்கள் கட்சியின் முத்திரை அது என்று கூறி நீக்கும்படி கோரிக்கை வைத்தீர்கள். இதன் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஜெய் பீம்
உங்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் உறுப்பினராக இருக்கும் சூர்யா அந்த காட்சியை நீக்கினார். ஆனால் இந்த காட்சி வைக்கப்பட்டதற்கும், அந்த முத்திரை பயன்படுத்தப்பட்டதற்கு எந்த விதத்திலும் நடிகர் சூர்யாவிற்கு தொடர்பு இல்லை. அதேபோல் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

உணர்வு
ஆனால் பாமக கட்சியினர் தொடர்ந்து இதை முன்னிட்டு சூர்யாவை விமர்சனம் செய்து வருகிறார்கள். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சூர்யா அரசியல், ஜாதி, இனம், மதம் போன்ற எந்த சார்பும் இன்றி செயல்படுபவர். எந்த சார்பும் இன்றி ஏழை மக்களுக்கு உதவ கூடியவர்.
Recommended Video

மாணவர்கள்
பல விளிம்புநிலை மாணவர்களுக்கு கலங்கரை விளக்கமாக சூர்யா செயல்பட்டு வருகிறார். அவர்களின் வாழ்க்கையில் கல்வி ஒளி ஏற்றி வருகிறார். சமூக பணியாற்றி வரும் சூர்யாவை விமர்சிப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்று மிகவும் வருத்தத்துடன் கேட்டுக்கொள்கிறோம், என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications