ஜெயின்கள் சென்னையிலும் போராட்டம்- குஜராத், ஜார்க்கண்ட் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரிக்கை!
சென்னை: பாஜக ஆளும் குஜராத் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்யும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஜெயின்கள் வழிபாட்டு தல பிரச்சனைக்காக கண்டனம் தெரிவித்து சென்னையிலும் இன்று ஜெயின்கள் போராட்டம் நடத்தினர்.
நாடு முழுவதும் ஜெயின்கள், பாஜகவின் பிரதான வாக்கு வங்கியாக இருந்து வருகின்றனர். இந்து மதத்தின் ஒரு பிரிவினராக இருந்தாலும் ஜெயின்கள் வழிபாட்டு முறைகள், கோட்பாடுகள் வேறுபாடானவை. தனித்துவமான ஜெயின்களுக்கு குஜராத்தின் பாலிதானா புனித நகரம். இந்துக்களுக்கு காசியை போல ஜெயின்களுக்கு பாலிதானா பிரதான வழிபாட்டு தலம்.

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் பாலிதானா உள்ளது. 3,000 படிக்கட்டுகளைக் கடந்து மலை உச்சியின் மீது ஜெயின்களின் கோவில்கள் உள்ளன. இந்த மலை குன்றில் சட்டவிரோதமான கல்குவாரிகள் அமைக்க குஜராத்தில் ஆளும் பாஜக அரசு அனுமதி கொடுத்துள்ளது. மேலும் சட்டவிரோதமாக மதுவிற்பனையும் பாலிதானாவில் கொடிகட்டிப் பறக்கிறது. இதேபோல் ஜார்க்கண்ட் மாநிலம் Sammed Shikharjie வழிபாட்டுத் தலத்தை அம்மாநில அரசு சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது.

இந்த இரண்டுக்கும் எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் டெல்லி, அகமதாபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஜெயின்கள் பிரம்மாண்ட போராட்டம் நடத்தினர். டெல்லி இந்தியா கேட் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர் ஜனாதிபதியிடமும் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னையிலும் இன்று ஜெயின்கள் போராட்டத்தை நடத்தினர். சென்னை மையப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஜெயின்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று குஜராத், ஜார்க்கண்ட் அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications