சென்னையில் தடம் புரண்ட ஜன் சதாப்தி! நல்ல வேளை அது மட்டும் நடக்கல.. பெரு மூச்சுவிட்ட பொதுமக்கள்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்றுகொண்டிருந்த ஜன் சதாப்தி விரைவு ரயில் திடீரென தடம் புரண்டுள்ளது. இதனையடுத்து 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தடம் புரண்ட பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 280க்கும் அதிகமான பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து ரயில் பயணம், பாதுகாப்பு அம்சங்கள், ஆட்கள் பற்றாக்குறை, நிதி தேவை போன்றவை குறித்து பெரும் விவாதங்கள் மேலெழுந்தன.

ரயில்வே துறைக்கு என தனியாக பட்ஜெட் போடப்பட்டு ரயில்கள், தண்டவாளங்கள் ஆகியவை முறையாக பராமரிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைத்துவிட்டதன் மூலம் ரயில்வே துறைக்கு போதுமான அளவில் நிதி ஒதுக்கப்படவில்லை என ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்திற்கு பிறகு ஏற்படும் ஒவ்வொரு விபத்தையும் அரசும், பொதுமக்களும் கவனமாக உற்றுநோக்கி வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை தற்போது மற்றொரு விபத்து நடந்துள்ளது. அதாவது, சென்னை சென்டரல் ரயில் நிலையத்திற்கு வந்த ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் பயணிகளை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு, அங்கிருந்து பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்றுள்ளது.
இப்படி செல்லும் போது திடீரென ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது பெட்டிகள் மீண்டும் சரி செய்யப்பட்டு ரயில் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரவில்லை. பொதுவாக பணிமனைக்கு கொண்டு செல்லப்படும் ரயில்கள் மிகவும் குறைந்த வேகத்தில்தான் இயக்கப்படும்.
குறைந்த வேகத்தில் இயக்கிய ரயில் எப்படி தடம்புரண்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்வாய்ப்பாக ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications