ஜனநாயகன் சென்சார்.. இந்த வழக்கில் அனைத்தும் இயல்புக்கு மாறாக உள்ளது.. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
சென்னை: விஜய்யின் ஜனநாயகன் படத்தின் தணிக்கை விவகாரத்தில் அனைத்துமே இயல்புக்கு மாறாக உள்ளது என உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் யு/ஏ சான்று என முடிவு செய்துவிட்டு மறு தணிக்கைக்கு அனுப்பியது ஏன்? என்றும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வரும் 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்த நிலையில் இன்னமும் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம்
கேவிஎன் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இதன்படி தற்போது தமிழக தியேட்டர்களில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது.
இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கின்ற நிலையில் தற்போது வரை சென்சார் சான்றிதழ் ஜனநாயகன் படத்திற்கு கிடைக்கவில்லை. கடந்த டிசம்பர் மதம் 18 ஆம் தேதியே படக்குழு தரப்பில் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று கேட்டு அனுப்பப்பட்டது. ஆனால் நேற்று முன் தினம் இரவு ஜனநாயகன் படத்துக்கு யு/எ சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
சென்சார் சான்று கிடைக்கவில்லை
ஆனால் கேவிஎன் தரப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை. மேலும் தற்போது வரை தணிக்கை சான்று கிடைக்கவில்லை என்று கூறியது. இந்த நிலையில் தான் தணிக்கை குழு மறு தணிக்கைக்கு அனுப்பியதாக தகவல் வெளியானது. ரிலீசுக்கு 3 நாட்கள் மட்டுமே இருப்பதால் ஜனநாயகன் படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.
அப்போது நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி பட ரிலீசை ஏன் தள்ளி வைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியது. மேலும் தணிக்கை குழு கமிட்டியில் இருப்பவர் ஒருவர் தான் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து நீதிபதி வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தார். அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அனைத்தும் இயல்புக்கு மாறாக உள்ளது
அப்போது நீதிபதி பிடி ஆஷா, "யு / ஏ சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கில் அனைத்துமே இயல்புக்கு மாறாக உள்ளது. யு/ஏ சான்று என முடிவு செய்துவிட்டு மறு தணிக்கைக்கு அனுப்பியது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு வழக்கமான ஒன்று தான் என தணிக்கை வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், புதிய தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தை இன்னும் பார்க்க வேண்டி இருப்பதால் வழங்கப்படவில்லை என வாதம் வைக்கப்பட்டது. மேலும் பதில் மனு தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி தந்தால் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையாக பதில் அளிக்க முடியும் என வாதம் வைக்கப்பட்டது.
வழக்கத்திற்கு மாறான ஒன்று
அப்போது அந்த புகாரில் எனது ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று தானே கூறப்பட்டு இருக்கிறது. எனவே இந்த புகார் நிலைக்கத்தக்கதல்ல என நீதிபதி கூறினார். அப்போது அதற்கு பதில் அளித்த தணிக்கை குழு, படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்றும், திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறினர்.
பின்னர் நீதிபதி கூறுகையில், தணிக்கை வாரியத்தின் டைம்லைனை தயாரிப்பு நிறுவனம் பின்ப்பற்றித்தான் ஆக வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். தணிக்கை குழு உறுப்பினர் புகார் அளிப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று என பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
ஒருவர் மட்டும் எப்படி புகார் அளிக்க முடியும்?
வழக்கமாக விண்ணப்பித்த ஒரு வாரத்தில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும். படம் பார்த்த 5 பேரில் ஒருவர் மட்டும் எப்படி புகார் அளிக்க முடியும்? என்றும் படக்குழு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. 500 கோடி முதலீடு செய்து படம் எடுத்துள்ளோம் என்று பட தயாரிப்பு நிறுவனம் கூறியது.
நாளை மறுதினம் ரிலீஸ் எனக்கூறி சான்றிதழ் கேட்க முடியாது என்றும் தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. குறித்த தேதியில் படம் வெளியிடப்படவில்லை என்றால் பெரும் இழப்பு ஏற்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது. அப்போது வழக்கை வேறு ஒரு நாளுக்கு ஒத்தி வைக்கலாமா என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு படக்குழு இன்றே தீர்ப்பளிக்க வேண்டும் என வாதாடினர். இவ்வாறாக வாதம் தொடர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications