"விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு".. சென்சார் சான்று கிடைக்காதது ஏன்?.. ஜனநாயகன் தயாரிப்பாளர் வீடியோ
சென்னை: ‛ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட்டப்படி இன்று வெளியாகவில்லை. இந்நிலையில் தான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனத்தின் வெங்கட் நாராயணா வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், ‛‛ எங்களின் ஜனநாயகன் திரைப்படத்திற்காக மிகுந்த அன்போடும், எதிர்பார்ப்போடும் காத்திருக்கும் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். கடந்த சில நாட்களாக ஏராளமான அழைப்புகளையும், செய்திகளையும் நாங்கள் பெற்றோம். அது ஒவ்வொன்றும் இந்த திரைப்படம் எவ்வளவு ஆழமாக நேசிக்கப்படுகிறது என்பதை எங்களுக்கு நினைவூட்டுகிறது.
இந்த வேளையில் நாங்கள் சில உண்மைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறோம். இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் முன்பு உள்ளது. இதனால் எதை கூற வேண்டும்? எதை கூறக்கூடாது என்ற கட்டுப்பாடு எங்களுக்கு உள்ளது. இந்த திரைப்படம் கடந்த 2025 டிசம்பர் 18ல் சென்சார் போர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை தணிக்கை குழு பார்த்தது.
டிசம்பர் 22ல் சில மாற்றங்கள் செய்ய கூறியது. அதுமட்டுமின்றி UA 16+ சான்றிதழ் வழங்கப்படும் என்று ஒரு இமெயில் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சென்சார் பரிந்துரைத்த மாற்றங்களை நாங்கள் செய்து படத்தை உங்களுக்கு கொண்டு வர தயாராகினோம். எப்படியாவது சென்சார் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் மீண்டும் படத்தை சென்சார் குழுவிடம் சமர்ப்பித்தோம்.
ஆனாலும் சென்சார் சான்று கிடைக்கவில்லை. தொடர்ந்து அதனை பெறுவதற்கான பணிகளை செய்து வந்தோம். திரைப்படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பாக அதாவது ஜனவரி 5ம் தேதி மாலையில் படம் மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒருவரின் புகாரின் அடிப்படையில் மறுஆய்வு குழுவுக்கு திரைப்படம் அனுப்பப்பபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
— KVN Productions (@KvnProductions) January 9, 2026
திரைப்படம் வெளியாவதற்கான காலம் குறைவாக தான் இருந்தது. அதோடு படம் தொடர்பாக புகார் அளித்தது யார்? என்பது எங்களுக்கு தெரியாமல் இருந்தது. இதனால் உயர்நீதிமன்றத்தை அணுகினோம். ஜனவரி 6, ஜனவரி 7 ஆகிய தேதிகளில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் UA 16+ சான்றிதழை வழங்க உத்தரவிட்டது. ஆனால் சென்சார் போர்டு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்தது. அதன்பிறகு சென்சார் சான்று வழங்குவதற்கான உத்தரவு நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கடினமான காலகட்டத்தில் எங்களுடன் துணை நின்ற ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் அனைவரிடமும் மனதில் இருந்து மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். ஏனென்றால் திட்டமிட்டபடி இந்தப் படத்தை திரையரங்குக்கு கொண்டு வர நாங்கள் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம்.
இருப்பினும் எங்களின் கட்டுப்பாடு இல்லாத சில நிகழ்வுகளால் இப்படி ஆகிவிட்டது. திரைப்படத்திற்காக தங்களின் இதயப்பூர்வமான உழைப்பை வழங்கிய அனைவருக்கும் இது மிகவும் கடினமான தருணம். எல்லாவற்றிற்கும் மேலாக விஜய் சார் அவரது ரசிகர்களிடம் பல தசாப்தங்களாக பெற்ற அன்பு மற்றும் திரைதுறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு உள்ளிட்டவற்றுக்காக அவருக்கு பிரியா விடை அளிக்க வேண்டும். அதற்கு அவர் தகுதியானவராக உள்ளார்.
உங்கள் ஒவ்வொருவரின் பொறுமை, நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத ஆதரவ எங்களுக்கு வலிமையை தருகிறது. நீதித்துறை செயல்பாட்டின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. மேலும் படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். நன்றி’’ என்று உருக்கமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications