அதிர்ந்தது இந்தியா... விண்ணை பிளந்த கைதட்டல்.. ஆனால்.. இனிதான் நிறைய வேலை இருக்கு நமக்கு!
மக்கள் ஊரடங்கு மேலும் தொடர வேண்டும்
சென்னை: பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படியே நாட்டு மக்கள் தங்கள் கைகளை 5 நிமிடம் தட்டி மருத்துவ துறையினருக்கு பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.. ஆனால் எதற்காக கைகளை தட்ட வேண்டும்? இந்த கைதட்டல் மட்டும் போதுமா? இதையும் தாண்டின ஒரு விஷயம் நமக்கு அதிஅவசியமாக தோன்றவில்லையா? நிச்சயம் உள்ளது.. மக்கள் ஊரடங்கு கட்டாயம் தொடர வேண்டும் என்பதே அது!
Recommended Video
இன்று மாலை 5 மணி அளவில் வீட்டின் பால்கனி அல்லது ஜன்னலோரம் வந்து நின்று சுகாதார துறை ஊழியர்களின் முயற்சிகளை பாராட்டும் விதமாக கை தட்டி, தங்கள் ஆதரவை தெரிவிக்கலாம் என்றும் மோடி தெரிவித்திருந்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய டாக்டர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோர் தங்களையே அர்ப்பணித்து வருகின்றனர்.

மகத்தானது
ஓய்வு ஒழிச்சலின்றி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இது ஒரு தொற்று நோய் என்று தெரிந்தும், முகம் கோணாமல், இரவு பகல் பாராமல் மருத்துவ துறை தன்னை ஈடுபடுத்தி வருகிறது.. இந்த சேவை மகத்தானது.. இவர்களின் இந்த சேவையைப் பாராட்டி இன்றைய தினம் மாலை 5 மணிக்கு இருக்கும் இடத்தில் எழுந்து நின்று கை தட்டியோ, பெல் அடித்தோ ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இசை வாத்தியங்கள்
பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டு மக்கள் தங்கள் கைகளை தட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர்.. மேலும் பலர் இசை வாத்தியங்களை இசைத்தனர்.. மணிகளை அடித்து மகிழ்ச்சிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.. இந்த கைதட்டல்கள் நாடு முழுவதும் உள்ள டாக்டர்கள், நர்சுகளுக்கு கேட்க போவது இல்லை.. ஆனால் இது ஒரு கடமை உணர்ச்சி.. நன்றிக்கடன்.. நாடு தலைவணங்கி தரும் உற்சாகம்!

சின்ன காணிக்கை
அதனால்தான் பிரமரின் இந்த கோரிக்கைக்கு நாட்டு மக்கள் ஒருங்கிணைந்து கைகளை தட்டி சபாஷ் சொல்லி உள்ளனர்.. மருத்துவ துறையினருக்கு செலுத்தப்படும் ஒரு சின்ன காணிக்கைதான் இது.. ஆனால் இந்த கைதட்டல் மட்டுமே போதுமா? என்றால் போதாது என்றுதான் சொல்ல வேண்டும்.. இந்த ஊரடங்கை, இந்த கட்டுப்பாட்டை, இந்த கட்டுக்கோப்பை நாம் மேலும் பல நாட்களுக்கு தொடர்ந்தாக வேண்டும்.. அப்படிப்பட்ட நிர்ப்பந்தத்தில் உள்ளோம்.. இப்போதைக்கு 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக விஜயபாஸ்கர் சொல்கிறார்.. இன்று ஒரே நாளில் 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 7 ஆக உர்ந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு
எனவே நாடு ஒரு அவசர கோலத்தில் உள்ளது.. இந்த ஒருநாள் ஊரடங்கினை நீட்டிக்க வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் சேர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்... நாட்டின் சூழல், மருத்துவம், பொருளாதாரம், போக்குவரத்தை இவைகளை வைத்து மத்திய அரசு எடுக்கக்கூடிய முடிவு இது.. ஆனால் ஊரடங்கு உத்தரவினை நீட்டிப்பது என்பது அவசியம்.

அவசியம்
அதேபோல, முழுக்க முழுக்க அரசையே சார்ந்து நிற்காமல், முடிந்தவரை நாம் நம்மை தனிமைப்படுத்தி கொள்ளல் அவசியம்.. தொடர்ந்து கட்டுப்பாடு காத்து சுய சுத்தத்தை பேணி வர வேண்டும்.. அதற்காக இன்றைய ஊரடங்கை தொடக்கமாக எடுத்துக் கொள்வதுதான் நல்லது... இது முழு அடைப்போ அல்லது பாரத் பந்த்தோ கிடையாது... உங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள எடுக்கும் தற்காப்புதான்!

காப்பாற்றுவது
மேலும் தனிமைப்படுத்தி கொள்வது என்பது அவமானமோ, தண்டனையோ, இழிவோ கிடையாது.. ஒருசிலர் தனிமைப்படுத்துதலை தவறாக புரிந்து கொள்கிறார்கள்.. கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டவர்களை போல கருதி கொள்கிறார்கள்.. தனிமைப்படுத்துதல் என்பது உங்கள் உயிரையும் காப்பாற்றி, அடுத்தவர் உயிரையும் சேர்த்து காப்பாற்றுவதுதான்!

துவக்க புள்ளி
இந்த ஒருநாள் ஊரடங்கு என்பது நமக்கு துவக்க புள்ளியாக இருக்கட்டும்.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொடர்ந்து ஒட்டுமொத்தமாக திரண்டு ஆதரவு தருவோம்.. ஜாதி, மதம் கடந்த, மாநிலம் கடந்த, தேசம் கடந்த உலகளாவிய மிரட்டல்தான் இந்த கொரோனா.. மனித உறவுகளை அசைத்து பார்க்க வந்த கொடூரன்.. இந்த ஊரடங்கு முடிந்தாலும் கூட மக்கள் தொடர்ந்து தங்களைமுடிந்தவரை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது..

வரலட்சுமி சரத்குமார்
சில தினங்களுக்கு முன்பு வரலட்சுமி சரத்குமார் ட்வீட் ஒன்றினை ஷேர் செய்திருந்தார்.. அதில், "வரலாற்றில் இதுவரை எதுவும் செய்யாமல் வீட்டில் அமர்ந்திருப்பதன் மூலம் நாம் மனிதகுலத்தை காப்பாற்றலாம் என்ற நிலை தற்போது தான் வந்துள்ளது, தயவு செய்து அதை கெடுத்துவிட வேண்டாம்" என்றது அந்த பதிவு.. இதை தன் ட்விட்டரில் பதிவு செய்த வரலக்ஷ்மி "இதை விட அழகாக யாராலும் கூறமுடியாது, இதை எழுதியவருக்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்". இந்த ட்வீட் யாருடையது என்று தெரியவில்லை.
ஆனால் இதுதான் நிதர்சன உண்மை.. மனிதர்களின் உயிர்களை மட்டுமல்ல, மனிதர்களின் விலைமதிக்க முடியாத உணர்வுகளையும் பந்தாடி கொண்டிருக்கும் இந்த கொரோனா அசுரனுக்கு முடிவு கட்டுவோம்!












Click it and Unblock the Notifications