பக்ரீத் பண்டிகை வருவதால் ஸ்கூல் கூட்டத்தை ஒத்தி வைக்கவும்! அன்பில் மகேஷுக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள்!
சென்னை: பக்ரீத் பண்டிகை நாளை மறுதினம் வருவதால், பள்ளிகளில் நாளை நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக் குழு மறு சீரமைத்தல் நிகழ்வை வேறொரு நாளுக்கு மாற்றி வைக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
''தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு மறு சீரமைத்தல் நிகழ்வு நாளை (09.07.2022) நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அறிவிப்பு அனுப்பியுள்ளது.

எதிர்வரும் 10.07.2022 அன்று பக்ரித் (தியாகத் திருநாள்) பண்டிகை கொண்டாடப் படுகிறது. அதற்கு முதல் நாள் அதாவது 9.7.2022 அன்று முஸ்லிம்கள் அரஃபா என்னும் நோன்பு நோற்பது வழக்கம். எனவே அன்று முஸ்லிம் மாணவர்களின் பெற்றோர்கள் மேற்படி உறுதிமொழி எடுத்தல் நிகழ்வில் கலந்துகொள்வது சிரமமாக இருக்கும் என்பதால் இந்நிகழ்வை வேறொரு நாளில் மாற்றிவைக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும் அரசு உதவிபெறும் சிறுபான்மை -முஸ்லிம் பள்ளிகளில் வழக்கமாக பக்ரித் பெருநாள் பண்டிகைக்கு பின் மூன்று நாட்கள் விடுமுறை அளிப்பது வழக்கம். குறிப்பாக ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் இந்த நடைமுறை உள்ளது. கடந்த ஆண்டும் அந்த நடைமுறை பின்பற்றப்பட்டு இருக்கின்றது. ஆனால் தற்பொழுது திருப்பத்தூர் மாவட்ட தலைமை கல்வி அலுவலர் 11ஆம் தேதி விடுமுறை விடக்கூடாது என்று உத்தரவிட்டிருப்பதாக அறிகிறேன்.
எனவே பள்ளி மேலாண்மைக் குழு மறு சீரமைத்தல் நிகழ்வு நாளை மாற்றியமைக்க வேண்டியும், அரசு உதவிபெறும் சிறுபான்மை -முஸ்லிம் பள்ளிகளில் கூடுதலாக விடுமுறை அளிக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.'' இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications