சொந்த ஊர்களில் பக்ரீத் பண்டிகை! ஜூன் 30ஆம் தேதி 1 நாள் சேர்த்து லீவு விடுங்க! ஜவாஹிருல்லா கோரிக்கை!
சென்னை: ஜூன் 29ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் ஜூன் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சொந்த ஊருக்குச் செல்பவர்கள் திரும்பிவர அவகாசம் அளிக்கும் வகையில் இந்த ஒரு நாள் விடுமுறையை கூடுதலாக விட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை வருமாறு;

''தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை ஜூன் 29 அன்று கொண்டாடப்படவிருக்கும் நிலையில் ஜூன் 30 வெள்ளிக்கிழமை அன்று அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் எனச் சிறுபான்மை முஸ்லிம்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.
ஜூலை 1 மற்றும் ஜூலை 2 சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் முஸ்லிம் அரசுப் பணியாளர்கள் ஆகியோர் தனது சொந்த ஊர்களுக்கு பண்டிகை கொண்டாடித் திரும்புவதில் சிரமம் இருக்காது. மேலும் ஒருசில கல்வி நிறுவனங்களில் ஜூன் 30 அன்று தேர்வுகளும் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சொந்த ஊருக்குச் செல்பவர்கள் திரும்பிவர அவகாசம் அளிக்கும் வகையில் பக்ரீத் பண்டிகைக்கு அடுத்த நாளான ஜூன் 30-ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications