உயிருக்கு ஆபத்து என்று செய்தியாளர் சொல்லியும் போலீஸ் மெத்தனம்! ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!
சென்னை: உயிருக்கு ஆபத்து உள்ளது என செய்தியாளர் முன்கூட்டியே காவல்துறைக்குத் தகவல் அளித்தும் உரிய பாதுகாப்பை வழங்காதது கண்டனத்திற்குரியது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மேலும் பல்லடம் காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது பற்றி பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை வருமாறு;

''நியூஸ் 7 தொலைக்காட்சியின் பல்லடம் செய்தியாளர் நேசபிரபு இன்று மர்மக் கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இக்கொடுஞ்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன்.''
''தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என அவர் முன்கூட்டியே காவல்துறைக்குத் தகவல் அளித்தும் காவல்துறையினர் அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்காதது கண்டனத்திற்குரியது.''
''நேசபிரபு ஒரு துடிப்பான செய்தியாளராகப் பணியாற்றியவர். அவரை கொலைவெறியுடன் தாக்கியவர்களை உடனடியாகக் கைது செய்து கடுமையான சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் தண்டிக்க வேண்டும் என்று கோருகிறேன். செய்தியாளர் நேசபிரபுவிற்கு பாதுகாப்பு வழங்கத் தவறிய பல்லடம் காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதேபோல், செய்தியாளர்களின் பாதுகாப்பு என்பது ஜனநாயகத்தின் பாதுகாப்பு எனக் கூறியுள்ள மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு;
''திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த நியூஸ்7 செய்தி தொலைக்காட்சியின் நிருபர் நேச பிரபு கள்ளச்சாராய கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டிருப்பதை வன்மையாக மஜக கண்டிக்கிறது. மக்களின் குரலாய் செயல்படும் செய்தியாளர்களின் பாதுகாப்பு என்பது ஜனநாயகத்தின் பாதுகாப்பாகும்.''












Click it and Unblock the Notifications