உழைப்பவர் வியர்வை உலரும் முன்பே ஊதியம் தரணும்! நபிகளாரின் பொன்மொழியுடன் ஜவாஹிருல்லா மே தின வாழ்த்து!
சென்னை: உழைப்பவர் வியர்வை உலரும் முன்பே அவர்களுக்கு ஊதியம் தரக் கூறிய நபிகளாரின் பொன்மொழியை சுட்டிக்காட்டி ஜவாஹிருல்லா மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தி வருமாறு;
உழைப்பாளிகளின் பெருமையை உலகெங்கும் உரைத்திடும் உயரியத் திருநாள் இந்த மேதினம். உழைப்புக்கேற்ற ஊதிய மின்மை, கொத்தடிமைத் தனமான இன்னல்கள் ஆகியவற்றில்இருந்து தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமாக உலக அரங்கில் உரிமைகளை உறுதிசெய்த நாள் மே 1.
உழைப்பவர் வியர்வை உலரும் முன்பே அவர் தம் ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்றார்கள் நபிகளார்.

மனிதக்குல வரலாற்றில் தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமைகளுக்காக மட்டும்போராடவில்லை. அடக்குமுறையை எதிர்த்தும், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், மனிதஉரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இரத்தம் சிந்தினார்கள், போராடினார்கள்.
1884 முதல் 1889 வரை உலக அரங்கில் நடைபெற்ற தொழிலாளி வர்க்கத்தின் புரட்சியின் நீட்சிதான் இந்த மே தினம். இந்தியாவில் முதன் முறையாக மே தினம் சென்னை மாநகரில் கொண்டாடப்பட்டதின் நூற்றாண்டாகவும் இந்த ஆண்டு விளங்குகின்றது.
இன்று இந்தியாவில் பெருந்தொழில் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் பெருந்தியாகங்களில் விளைவாகப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகள் லாவகமாகப் பறிக்கப்படும் சூழல் நிலவுகின்றது.
தொழிலாளர் வர்க்கத்திற்குச் சவால்கள் நிறைந்த இச்சூழலில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதி எடுப்போம்.
உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையைப் பறைசாற்றும் இந்நாளில் வகுப்புவாத, பாசிச சக்திகளை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றவும் உறுதி ஏற்போம். தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும்.












Click it and Unblock the Notifications