தமிழக மக்கள் பரிசோதனை எலிகள் அல்ல! கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க ஜவாஹிருல்லா எதிர்ப்பு!
சென்னை: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா.
தமிழக மக்கள் ஒன்றும் பரிசோதனை எலிகள் அல்ல என்றும் அணுக்கழிவு மையம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கூடங்குளம்
கூடங்குளத்தில் 1000 மெகாவாட் கொண்ட அணுமின் அலகுகள் இரண்டு செயல்பட்டு வரும் நிலையில் மூன்று மற்றும் நான்காவது அலகுகள் அமைக்கும் பணி 2017ஆம் ஆண்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 5வது, 6வது அலகுகள் அமைக்கும் பணியும் சமீபத்தில் தொடங்கி இருக்கிறது. தேசிய அணுமின் கழகம் மூன்றாவது நான்காவது உலைகளின் அருகிலேயே அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

அணுக்கழிவு மையம்
அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்காக 2019 ஜூலை 10 ஆம் தேதி பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற மாசு கட்டுப்பாட்டு வாரியம் முயற்சி மேற்கொண்டது. கூடங்குளம் இடிந்தகரை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது என மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவித்தது.

மத்திய அமைச்சர்
இதுகுறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கூட இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான வசதி இந்தியாவில் உள்ளதா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் மறுசுழற்சிக்கு எடுத்துப் போகும்வரை அருகில் மையத்தில் சேமித்து வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆபத்து ஏற்படும்
நிரந்தரமாக அணுக்கழிவுகளை சேமித்து வைக்க உலக நாடுகள் திணறி வருகின்ற நிலையில் ஆழ்நிலை கருவூலம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யக்கூட இன்னும் முடியாத நிலையில் அணுக்கழிவுகளை கூடங்குளத்தில் தொடர்ந்து சேமித்து வைக்க முயல்வது மிகப்பெரிய பேராபத்தை உண்டாக்கும்.

தமிழக அரசு
தமிழ்நாடு அரசு இந்த விஷயத்தில் உறுதியான நிலையை எடுத்த பின்னரும் அணுக்கழிவு மையம் அமைக்கும் வேலைகளைச் செய்வது என்பது தமிழ்நாடு அரசையும் தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும். கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான தேசிய அணுமின் கழகம் மேற்கொண்டுவரும் அனைத்து பணிகளையும் உடனடியாக நிறுத்துவதற்கு ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலுவான வகையில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

எலிகள் அல்ல
தமிழக மக்களின் சூழலியல் சார்ந்த இந்த விடயத்தில் எந்தவித பரிசோதனை முயற்சிக்கும் இடமளிக்கக்கூடாது. தமிழக மக்கள் பரிசோதனை எலிகள் அல்ல. எனவே மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்வதோடு ஏனைய சமூக ஆர்வலர்களும் அரசியல் கட்சியினரும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications