எல்லாமே வெறும் வாய் சவடால் தான்! MPக்களை பாதுகாக்க முடியாத மோடி மக்களை எப்படி காப்பார்? -ஜவாஹிருல்லா
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க முடியாத மோடி அரசு மக்களை எவ்வாறு பாதுகாக்கும் எனக் கேள்வி எழுப்பியுள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எல்லாமே வெறும் வாய் சவடால் தான் என விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்குள் இருவர் அத்துமீறிய நிகழ்வு குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மேலும், அவர் பிரஸ்மீட்டில் பேசியதாவது;

''நமது நாட்டின் புதிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இருவர் பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்து வண்ண புகை மூட்டத்தை ஏற்படுத்தும் கைக்குண்டுகளை விசியிருப்பது கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மக்களவைக்குள் நுழைவதற்கான அனுமதி சீட்டு பரிந்துரையை கர்நாடக மாநிலம் மைசூர் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் பிரதாப் சிம்ஹா என்பவர் வழங்கியுள்ளார் என்ற தகவலையும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2001ம் ஆண்டு இதே நாளில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி ஒன்றியத்தில் இருந்த போது நாடாளுமன்ற வளாகத்திற்குள் பயங்கரவாத தாக்குதலுக்கு நடைபெற்றது. 22 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்திற்குள் மக்களவையில் மோடி தலைமையிலான ஆட்சியின் போது இன்று இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நாடாளுமன்றத்தின் ஐந்து அடுக்கு பாதுகாப்பை மீறி இந்த இருவரும் மக்களவைக்குள் நுழைந்திருப்பது மோடி ஆட்சியில் மக்களின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடம் மிகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் ஒன்றிய அரசின் சார்பாக விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் அத்தகைய அறிவிப்புகளெல்லாம் வெறும் வாய் சவடால்கள் என்பதை பயங்கர சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க முடியாத மோடி அரசு மக்களை எவ்வாறு பாதுகாக்கும் என்ற நியாயமான சந்தேகமும் சாதாரண குடிமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வெழுதப் போன மாணவர்களை உள்ளாடைகள் வரை பயங்கரவாதிகளைப் போல் பரிசீலிக்கும் போது புகைக்குண்டுகளை எடுத்துவந்த விசமிகளை எப்படி அனுமதித்தார்கள்?அதுவே நச்சுப்புகைக் குண்டுகளாய் இருந்திருந்தால் நினைக்கவே மனம் பதறுகிறது.
மக்களவையில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் குறித்து நீதி விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டு கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications