விவசாயிகள் பாவம்... தயவு செய்து இது வேண்டாம்... முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய ஜவாஹிருல்லா..!
சென்னை: நெல் கொள்முதல் நடைமுறையில் பழைய முறையையே தொடர வேண்டும் என்றும் புதிய முறையான ஆன்லைன் பதிவு முறையால் விவசாயிகள் சிக்கல்களை எதிர்கொள்வார்கள் எனவும் கூறியிருக்கிறார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா.
விவசாய பெருங்குடி மக்கள் தன்னிடம் முறையிட்டதை அடிப்படையாக வைத்து இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, டெல்டா மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கடிதம் ஒன்றையும் அவர் எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தின் விவரம் பின்வருமாறு;

நெல் கொள்முதல்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு ஆன்லைன் பதிவு முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தப் புதிய முறையில், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யவேண்டிய நிலம் மற்றும் சாகுபடி விவரங்களை அதற்கென அளிக்கப்பட்டுள்ள இணையதளத்தில் ஸ்மார்ட் போன், இ-சேவை மையங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக பதிவு செய்ய வேண்டும்.

விவரங்கள்
இந்த விவரங்கள் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் அனுமதி அளித்தவுடன், அந்த விவசாயியின் செல்போன் எண்ணுக்கு, நெல்லை கொள்முதல் நிலையத்துக்கு எப்போது கொண்டு வர வேண்டும் என குறுந்தகவல் வரும், அப்போது எடுத்துச் சென்று விற்பனை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் பதிவு
இந்த ஆன்லைன் பதிவு முறையானது விவசாயிகளுக்கு புதியதோர் சுமையாக அமைந்துள்ளது. விவசாயிகளில் பலர் குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்து வருகின்றனர். பலருக்கு நிலத்தின் பட்டா எண்கூட தெரியாது. மேலும் உதாரணத்திற்கு தந்தை பெயரில் ஒரே சர்வே எண்ணில் உள்ள நிலத்தில், அவரது 3 மகன்கள் தனித்தனியே சாகுபடி செய்யும்போது, ஆன்லைன் பதிவில் அந்த சர்வே எண்ணுக்குரிய நிலம் முழுவதுக்கும் ஒரே நேரத்தில்தான் விற்பனை செய்ய அனுமதி கிடைக்கும்.

காலதாமதம்
இதனால், அறுவடை செய்வதில் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், ஆன்லைன் பதிவில் சர்வே எண் உள்ளிட்டவற்றில் விவசாயிகள் சிறு தவறு செய்தாலும் கூட நிராகரிக்கப்படும் நிலை ஏற்படும். இதனால் மீண்டும் பதிவு செய்ய காலதாமதம் ஏற்படும்.

இழப்புக்கு வாய்ப்பு
உடனடியாக அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிரை ஆன்லைன் பதிவு மூலம் 2 வாரங்கள் கழித்து கொள்முதலுக்கு அனுமதி கிடைக்குமேயானால், இடைப்பட்ட காலங்களில் ஏற்படும் மழை போன்ற இயற்கை சீற்றங்களால் நெல்மணிகள் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

அன்புடன்
விவசாயிகளில் கணிசமானோர் இணையதளம், ஸ்மார்ட் ஃபோன் போன்ற நவீன தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தும் நிலையில் இல்லை என்பதால், பழைய நிலையிலேயே நெல்கொள்முதல் பணியைத் தொடர மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications