தொடர் கனமழை... வக்ஃப் வாரிய தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்... ஜவாஹிருல்லா வலியுறுத்தல்..!
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வக்பு வாரிய தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை வானிலை மையத்தின் அறிவிப்புகளை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு வக்பு வாரியம் இந்த விவகாரத்தில் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாடு வக்ஃப் வாரிய பணியாளர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் எழுத்து தேர்வு வரும் 13 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வு ஆன்லைன் தேர்வு என்றாலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று அங்கு தேர்வுகளை எழுத வேண்டும் என தமிழ்நாடு வக்ஃப் வாரியம் அறிவித்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையும் அதனை தொடர்ந்து வெள்ளப்பெருக்கும் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 10ஆம் தேதி முதல் ஒரு வாரம் வரை கனமழை நீடிக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் கனமழையாலும், அதனைத் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு, போக்குவரத்து துண்டிப்பு போன்ற காரணத்தால் தேர்வுகளில் தேர்வர்கள் பங்கேற்பது கடினம்.
எனவே, தமிழக அரசு நவம்பர் 13 அன்று நடைபெறவுள்ள இந்த தேர்வை ஒத்திவைத்து வேறொரு நாளில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் தேர்வு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தாலே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதால், காலியாக உள்ள 27 பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் போட்டித் தேர்வு எழுதவுள்ளனர்.
வக்பு வாரியத்தில் இளநிலை உதவியாளர்களாக பணி நியமனம் செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications