வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம்... உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றம் -ஜவாஹிருல்லா
சென்னை: வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் ஒளியேற்றியுள்ளார் என மனிதநேய மக்கள் கட்சி பாராட்டியுள்ளது.
புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு செயலூக்கம் அளிக்கும் வகையில் முதலமைச்சரின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா விடுத்துள்ள நன்றிச் செய்தியில்;

90 நாடுகள்
உலகில் 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் நலன் பேண ஒரு நல வாரியம் அமைக்க வேண்டுமென்பது எமது நீண்ட கால கோரிக்கையாகும். இது குறித்து சட்டமன்றத்திலும் வலியுறுத்தி பேசியுள்ளேன். நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

நல வாரியம்
இதன் தொடர்ச்சியாக தற்போது புலம்பெயர் தமிழர் நல வாரியம் என்ற புதிய வாரியத்தை அமைத்துத் தந்துள்ளார். அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகள் 13 பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும் எனவும் வாரியத்தின் மூலதனச் செலவினங்களுக்காக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாயும் நலத்திட்டம் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது.

என்னென்ன பயன்?
புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக தனி தரவுத் தளம் அமைத்து அதில் பதிவு செய்பவருக்கு ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வழங்கப்படும். பணியின்போது மரணித்தால் குடும்பத்தினரின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவி, திருமண உதவித் தொகை வழங்கப்படும் கல்வி வேலை வாய்ப்பிற்காக புலம்பெயரும் தமிழர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும்.
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஆலோசனை பெற வசதியாக கட்டணமில்லா தொலைபேசி வசதி மற்றும் வலைதளம் கைபேசி செயலி அமைத்து தரப்படும், சட்ட உதவி மையம் அமைக்கப்படும் உள்ளிட்ட முதலமைச்சரின் முத்தான அறிவிப்புகள் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு செயலூக்கம் தருபவையாகும்.

நலச்சங்கம்
முத்தாய்ப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உருவாக்கிய நலச்சங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு கலை இலக்கியம் பண்பாடு பரிமாற்றங்கள் நடத்த நான்கு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதும் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும் அங்கீகரிக்கும் விதமாகவும் வெளிநாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ஆம் நாள் புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக கொண்டாடும் அறிவிப்பு மகிழ்ச்சியளிப்பவை.

நன்றி நன்றி
மொத்தத்தில் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து புலம்பெயர்ந்து பணிசெய்யும் கோடிக்கணக்கான தமிழர்களின் வாழ்க்கையின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் இந்த அறிவிப்பு உறுதி செய்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றிய தமிழக முதல்வர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications