ஓபிஎஸ் எழுதிய கடிதம் வெளியே கசிந்தது எப்படி? ஜெயக்குமார் சரமாரி கேள்வி
சென்னை: பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் எழுதிய கடிதம் ஊடகங்களில் கசிந்தது ஏன் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை 99 சதவீதம் பேர் விரும்புகிறார்கள் என எடப்பாடி தரப்பினர் சொல்கிறார்கள். முன்னர் தர்மயுத்தம் நடக்கும் போது ஓபிஎஸ்ஸுடன் இருந்தவர்கள் எல்லாம் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
திட்டமிட்டபடி நாளை மறுநாள் பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என எடப்பாடி தரப்பினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்கள். ஒருங்கிணைப்பாளர் இல்லாத பொதுக் குழுவா என ஓபிஎஸ் தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் பொதுக் குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என 2000 உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளார்கள். பொதுக் குழுவை ஒத்தி வைக்க வேண்டும் என கோருவது வழக்கத்திற்கு மாறானது. அதிலும் இவர் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கிறார்.

கசிந்தது ஏன்
ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்தோ அல்லது போனிலோ தொடர்பு கொண்டு இந்த கோரிக்கையை வைத்திருக்கலாம். அதை விட்டு விட்டு கடிதம் எழுதுவது ஏன். அதிலும் பொதுக் குழுவை ஒத்தி வைக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் எழுதிய கடிதம் வெளியே ஊடகங்களுக்கு கசிந்தது எப்படி?

பதில் கடிதம்
சரி இந்த கடிதத்தைதான் கசியவிட்டுவிட்டார்கள். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி எழுதிய பதில் கடிதத்தையும் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்கள். ஒரு கட்சிக்குள் நடக்கும் விஷயத்தை பகிரங்கப்படுத்துவது ஏன்? மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடந்ததை நான் வெளியே சொல்லிவிட்டதாக சொல்கிறார்கள்.

கடைக் கோடி தொண்டனுக்கு தெரியக் கூடாதா
நான் என்ன ரகசியத்தையா சொல்லிவிட்டேன். இல்லை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது மாவட்டச் செயலாளர்களுக்கு மட்டும் தெரிய வேண்டும், கடைக்கோடி தொண்டனுக்கு தெரிய கூடாது என ஓபிஎஸ் கருதுகிறாரா? கட்சியில் இருந்து ஒருவர் நீக்கப்பட்டால் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டுள்ளார்.

பெங்களூர் புகழேந்தி
அப்படியிருக்கும் போது பெங்களூர் புகழேந்தியை இவர் சந்திக்கலாமா? அப்போது ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டமா? என கேட்டு பெங்களூர் புகழேந்தியை கடுமையாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications