ஸ்டார் ஹோட்டல்ல கிடைக்காத சந்தோஷம்.. மதுரை செல்லும் வழியில் மரத்தடியில் உணவு சாப்பிடும் ஜெயக்குமார்
சென்னை: மதுரை மாநாட்டுக்கு செல்லும் வழியில் விக்கிரவாண்டியில் ஒரு மரத்தடி நிழலில் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் பிரியாணி சாப்பிடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
மதுரைன்னாலே மல்லி... அது போல் மதுரைன்னாலே மாநாடும் முக்கியத்துவம் பெறுகிறது. முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு இந்த மதுரை மாநாடு பல திருப்பு முனைகளை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

அது போல் தற்போது அதிமுகவின் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டை நாளை நடத்துகிறார். வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வைக்கும் முயற்சிகளை அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்.
மற்றொரு புறம் தாங்கள்தான் உண்மையான அதிமுக என ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். எனவே தான்தான் உண்மையான அதிமுக என நிரூபிக்க பெருவாரியான தொண்டர்கள் பலத்தை காட்ட எடப்பாடி முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் நாளை காலை 8 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு மாநாடு நிறைவு பெறுகிறது.
அங்கு அமைக்கப்பட்டுள்ள 51 அடி உயர கொடி கம்பத்தில் அதிமுகவின் கொடியை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுகிறார். அப்போது ஹெலிகாப்டரில் பூக்களை தூவி வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எடப்பாடி தங்கியிருக்கும் ஹோட்டல் முதல் அவர் மாலை புறப்பட்டு மாநாட்டு கூட்டத்திற்கு வரும் வரை ஹெலிகாப்டரில் மலர்கள் தூவப்படுகிறது.
காலையில் 10 நிமிடமும் மாலையில் 10 நிமிடமும் பூக்கள் தூவப்படுகின்றன. இந்த மாநாட்டில் கலந்து கொள்வோருக்கு 3 வேளையும் சைவ சாப்பாடு வழங்கப்படுகிறது. இதற்காக 10 ஆயிரம் சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள். அது போல் 100க்கும் மேற்பட்ட கவுன்ட்டர்கள் உள்ளன. இங்கு வரிசையில் நின்று உணவை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த மாநாட்டுக்கு செல்ல தொண்டர்களுக்காக சென்னையிலிருந்து குளிர்சாதன வசதி செய்யப்பட்ட தனி ரயில் மதுரை சென்றுள்ளது. அது போல் மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் எல்லாம் காரில் மதுரைக்கு பயணிக்கிறார்கள். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது காரில் மதுரை புறப்பட்டுள்ளார்.
அவர் விக்கிரவாண்டி அருகே மரத்தடி நிழலில் பொன்னாடையை கீழே போட்டு இருவருடன் அமர்ந்து இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் பிரியாணி உண்டு மகிழ்கிறார். அவர் கூறுகையில் எத்தனையோ நட்சத்திர உணவகங்களில் கிடைக்காத ஒரு சந்தோஷம்! மதுரை மாநாட்டிற்கு செல்லும் வழியில் விக்கிரவாண்டியில் எழில் கொஞ்சும் இயற்கையோடு மதிய உணவு அருந்திய போது! என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications