கர்நாடகாவில் 40 சதவீத கமிஷன் ஊழலை பற்றி அண்ணாமலை ஏன் பேசவில்லை? ஜெயக்குமார் அட்டாக்
சென்னை: கர்நாடகா மாநிலத்தில் உள்ள 40 சதவீத கமிஷன் ஊழலைப் பற்றி அண்ணாமலை ஏன் பேசவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி அளித்திருந்தார். அதில் ஊழலை பொருத்தமட்டில் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சி காலம் மோசமானவை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதில் தமிழகத்தில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்துள்ளன.

முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் என்று கூட சொல்வேன் என குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த பதில் அதிமுகவினரை கோபத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரை குறிப்பிடாமல் அண்ணாமலை விமர்சித்திருந்தார். இதற்கு அதிமுகவினர் கடுங்கோபத்தில் உள்ளனர். இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்வினையாற்றியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: டெல்லியில் சமரச பேச்சு எதுவும் நடக்கவில்லை. எங்களது கண்டன குரல் டெல்லியில் கேட்கும்.
அதிமுக கூட்டணி வேண்டாமென நினைக்கிறார் அண்ணாமலை. கட்டுச் சோறில் உள்ள எலியை போல் அண்ணாமலை செயல்படுகிறார். அதிமுக கூட்டணியில் வில்லங்கம் செய்ய பார்க்கிறார். கர்நாடகா மாநிலத்தில் உள்ள 40 சதவீதம் கமிஷன் ஊழலைப் பற்றி அண்ணாமலை ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த 40 சதவீத ஊழல் குறித்து திமுக ஐடி விங்கும் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் கூறியிருப்பதாவது: போர் விமானங்கள் வாங்குவதில் ரஃபேல் ஊழல்,
மத்திய பிரதேசத்தில் அரசு பணியிடங்களை நிரப்புவதில் வியாபம் ஊழல்,
ஹிண்டன்பர்க் வெளிப்படுத்திய அதானி ஊழல்,
இன்னும் இன்னும் எத்தனையோ ஊழல்களுக்கும், அதிகார துஷ்பிரயோகங்களுக்கு மத்தியில்
40% கமிஷனால் கர்நாடகத்தில் இழந்துவிட்டு,
இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழும் நமது தமிழ்நாட்டை 'ஊழல் மாநிலம்' என்று இழித்துப் பேசி தமிழ்நாட்டையும் அதன் மக்களையும் இழிவுபடுத்தும் 'ப்ரவுட் கன்னடிகா'வின் லட்சனம் பாரீர்!? என திமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த மே 10 ஆம் தேதி தேர்தல் நடந்தது. இநத தேர்தலுக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசுகையில் கடந்த 3 ஆண்டுகளாக பாஜக ஆட்சி மக்களுக்கு எந்த நலத்திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. அரசின் திட்டங்களை மேற்கொள்வதற்கு ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீதம் கமிஷன் வாங்கியுள்ளனர்.
இதனை தர மறுத்த ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு புகார் அளித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை, 40 சதவீத ஊழலில் திளைத்த பாஜகவுக்கு இந்தத் தேர்தலில் 40 இடங்கே கிடைக்கும். காங்கிரஸ் ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications