ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த உண்மை வெளிவரும்... ஸ்டாலின் ஆவேச பேச்சு
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த விநாடி ஜெயலலிதா மர்ம மரணம் பற்றிய உண்மைகள் வெளிவரும். குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறையில் தள்ளுவது தான் எனது முதல் வேலை என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூரில் நேற்று மாலை நடந்தது.
இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:
மொழிப் பேராட்ட உணர்வு
தண்டவாளத்தில் தலை வைத்து படு என்றாலும், அமைச்சர் பதவி என்றாலும் இரண்டையும் ஒன்றாக கருதுபவர் தான் எனது தம்பி கருணாநிதி என்று புகழ்ந்தவர் அண்ணா. அந்த மொழிப் பேராட்ட உணர்வோடுதான் நான் இங்கே உங்கள் முன் நிற்கிறேன்.
மோடி என்ன செய்தார்?
பிரதமராக மோடி வந்ததும் இந்தியோடு சேர்த்து சமஸ்கிருதத்தை திணிக்கும் பணியையும் செய்து வருகிறார்கள்.
இரண்டு நாட்களில் மோடி மதுரை வருகிறார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வரும் அவரை நாங்கள் எதிர்க்கவில்லை. வரவேற்கிறோம். ஆனால் நான்கரை ஆண்டுளாக என்ன செய்தார் என்று நான் மோடியை கேட்கிறேன்.
முதல் வேலை
ஊழல் செய்ததற்காக முதல்வர்கள் தண்டனை பெற்றதுண்டு. ஆனால் கொலைகாரன் என்ற குற்றச்சாட்டுக்கு எந்த முதல்வரும் ஆளானதில்லை. திமுக விரைவில் ஆட்சிக்கு வந்த அடுத்த விநாடி ஜெயலலிதா மர்ம மரணம் பற்றிய உண்மைகள் வெளிவரும். குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறையில் தள்ளுவது தான் எனது முதல் வேலை.
2 வது சுதந்திர போராட்டம்
கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி கூட்டிய பொதுக்கூட்டத்தில் 22 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். மோடி ஆட்சியை அப்புறப்படுத்துவோம் என்று அனைவரும் முழங்கினர். நான் பேசும் போது, இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராட்டம் என்றேன் எனவும் குறிப்பிட்டார்.