எம்ஜிஆர் முதல் எடப்பாடி வரை.. தன் ஸ்டைலில் தனி முத்திரை பதித்த ஜெ. கூட்டணிகள் #aiadmk
எம்ஜிஆருக்கு பிறகு பல கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து வெற்றி பெற்றவர் ஜெயலலிதா!
சென்னை: எம்ஜிஆர் பார்முலாவை அப்படியே மாற்றிப் போட்டவர் ஜெயலலிதா. அவர் வைத்த கூட்டணிகள் மாநில அளவில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் தெறிக்க விட்டை. உண்மையில் அதிமுகவைப் பார்த்து தேசிய அளவில் டென்ஷன் உருவாக ஜெயலலிதாதான் காரணம்.
அடுத்து வந்தது ஜெயலலிதா சகாப்தம். இவர் எம்ஜிஆர் பாணியில் ஆட்சியை ஆரம்பித்தாலும் பின்னாளில் தனது பாணியை அறிமுகப்படுத்தி எம்ஜிஆரை ஓரம் கட்டி விட்டார் என்றே சொல்ல வேண்டும். அதை விட முக்கியமாக எம்ஜிஆர் போல நிதானித்து எந்த முடிவையும் ஜெயலலிதா எடுப்பதில்லை. மாறாக அதிரடி, தடாலடிதான்.
1991ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவின் அரசியல் எழுச்சியானது விஸ்வரூபம் எடுத்தது. அந்த ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா மிகப் பெரிய வெற்றியைப் பெற்று முதல் முறையாக முதல்வர் ஆனார். அவரது முதல் ஆட்சிக்காலத்தின் பாதிப் பகுதி பிரமாதமாக இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் நடந்த நிகழ்வுகள்தான் அவரை கடைசி வரை விடாமல் துரத்தியடித்து அவரது மரணத்தில் போய் முடிந்தது.

அனுதாப அலை
ஜெயலலிதா அந்த சட்டசபைத் தேர்தலை காங்கிரஸின் துணையோடு சந்தித்தார். ராஜீவ் காந்தி படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலையால் திமுக அத்தேர்தலில் தோல்வியைத் தழுவியது. ஜெயலலிதாவுக்கு வெற்றி எளிதானது. இது ஜெயலலிதாவின் முதல் கூட்டணி ஆகும் அதாவது எம்ஜிஆர் உருவாக்கிய காங்கிரஸ் கூட்டணியை இத்தேர்தலில் தொடர்ந்தார் ஜெயலலிதா.

பாஜக பட்டுக்கம்பளம்
1996 சட்டசபைத் தேர்தலிலும் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. ஆனால் தேர்தலில் படு தோல்வியே கிடைத்தது. 234 தொகுதிகளில் நான்கில் மட்டுமே அதிமுக வென்றது. ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். அதன் பின்னர் அதிமுக காங்கிரஸ் உறவு கசந்தது. ஜெயலலிதா புதிய முடிவை எடுத்தார். அது பாஜகவுக்கு பட்டுக் கம்பளம் விரித்த முடிவு.

புது வாழ்வு
1998 லோக்சபா தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் முதல் முறையாக கூட்டணி அமைத்தன. அதுவரை கண்டு கொள்ளப்படாமல் இருந்த பாஜகவுக்கு கிடைத்த மிகப் பெரிய கூட்டணி அதுதான். கிட்டத்தட்ட பாஜகவுக்கு புது வாழ்வு கொடுத்த முதல் தலைவர் ஜெயலலிதாதான். கூட வைகோவும் இணைந்தார். இது அதிமுக உருவாக்கிய வித்தியாசமான கூட்டணி என்பதை விட ஜெயலலிதாவின் புது பார்முலா என்றும் சொல்லலாம்.

அதிரடி ஜெயலலிதா
அதாவது நான் கொடுப்பதே சீட், நான் வைப்பதே கூட்டணி என்ற புதிய பார்முலாவை அவர் உருவாக்கினார். 1998 தேர்தலுக்குப் பிறகு டெல்லியில் வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைந்தது. அந்த ஆட்சியில் அதிமுகவும் இணைந்தது. ஆனால் அதிரடியாக ஒரே வருடத்தில் ஆதரவை வாபஸ் பெற்றார் ஜெயலலிதா. பாஜக அரசு கவிழ்ந்தது. அதன் பின்னர் தடாலடியாக காங்கிரஸ் பக்கம் திரும்பியது அதிமுக.












Click it and Unblock the Notifications