ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட பிள்ளையார் கோயில் பூசாரிக்கு கொலை மிரட்டல்.. ஜெ.தீபா, மாதவன் மீது புகார்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் அர்ச்சகர் தனக்கு உரிய மரியாதை தரவில்லை என கோரி தன்னை தாக்க முயன்றதாக ஜெ.தீபா, அவருடைய கணவர் மாதவன் மீது அர்ச்சகர் ஹரிஹரன் புகார் அளித்துள்ளார்.
சென்னை திநகர் அருளாம்பாள் தெருவை சேர்ந்தவர் கோயில் பூசாரி ஹரிஹரன் (42). இவர் போயஸ் தோட்டத்தில் ஜெயா டிவி கட்டடம் அருகே உள்ள பிள்ளையார் கோயிலில் பூஜை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் அவருடைய கணவர் மாதவனும் தன்னை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் தனது புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் தினமும் இந்த பிள்ளையாருக்கு பூஜை செய்து வருகிறேன். அவரது மறைவுக்கு பிறகு சசிகலாவின் அனுமதியுடன் நான் பூஜை செய்கிறேன். போயஸ் தோட்டத்தில் பிள்ளையார் கோயில், சிவன் கோயிலிலும் பூஜை செய்கிறேன்.
அதற்கான செலவு மற்றும் மாத சம்பளத்தை சசிகலா கொடுத்து வருகிறார். இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று காலை 8.30 மணிக்கு வழக்கம் போல் நான் கோயிலில் பூஜை செய்ய சென்றேன். அப்போது போயஸ் தோட்டத்திற்கு தேசியக் கொடியேற்ற வந்த தீபாவும் அவருடைய கணவர் உள்பட 50 பேர் என்னை பூஜை செய்யவிடாமல் தடுத்தனர்.
அப்போது ஜெ.தீபா என்னிடம் வந்து உன்னை யார் பூஜை செய்ய விட்டது? என கேட்டு தகாத வார்த்தைகளால் பேசி என்னை தாக்கவும் செய்தார். பூஜை பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்றுவிட்டார். இதை தடுக்க வந்த காவலர் ஒருவரையும் அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டினர். இனி இந்த கோயிலுக்கு பூஜை செய்ய வந்தால் கொலை செய்துவிடுவோம் என தீபாவும் மாதவனும் அவர்களுடன் வந்தவர்களும் மிரட்டினர். மேலும் பிள்ளையாரின் வெள்ளி கிரீடத்தையும் பறிக்க முயன்றனர்.
இதனால் கோயிலில் தொடர்ந்து பூஜை செய்ய எனக்கு அனுமதி அளித்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். எனக்கு கொலை மிரட்டல் விடுத்த தீபா, மாதவன் மற்றும் அவர்களுடன் வந்த 50 பேர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக போயஸ் தோட்ட இல்லத்தில் கொடியேற்ற வந்த தன்னை உள்ளே அனுமதிக்காமல் தீபக் தகராறு செய்ததாகவும் அங்கிருந்த கோயில் பூசாரி எங்களுக்கு உரிய மரியாதை தரவில்லை என்றும் தீபா தெரிவித்திருந்தார். மேலும் கொடநாடு எஸ்டேட் அத்தையின் பங்களா என்றாலும் அதை முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தது சசிகலா குடும்பம்தான். எனவே அங்கு நடந்த கொலையில் அவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என பரபரப்பு பேட்டி அளித்திருந்தார். இந்த பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். ஜெயலலிதா தினந்தோறும் இந்த கோயிலில் வழிபடுவார். அவரை தொடர்ந்து சசிகலாவும் இந்த கோயிலில் விநாயகர் சதுர்த்திக்கான பூஜைகளை செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications