என்னாது ஜெ.மகளா? எத்தனை பேர் இப்படி?.. ஆதாரம் இருந்தால் கொடுக்க வேண்டியது! எதற்கு இந்த பரபரப்பு?
சென்னை: ஜெயலலிதாவின் வாரிசு என கூறி கொண்டு எத்தனை பேர்தான் கிளம்பியுள்ளார்களோ தெரியவில்லை. உரிய நேரத்தில் ஆதாரத்தை சமர்ப்பிப்பேன் என கூறி புதியதாக ஒருவர் கிளம்பியுள்ளார். இவர்கள் எல்லாம் விளம்பரத்திற்காக செய்கிறார்களா என ஜெயலலிதாவின் நலம் விரும்பிகள் வேதனையுடன் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் அவருக்கு மகள் இருப்பதாக சொல்லப்படுவது கட்டுக்கதைகள் என அதிமுகவினர் தெரிவிக்கிறார்கள்.

கடந்த 2016ஆம் ஆணடு உடல்நலக் குறைவால் ஜெயலலிதா மறைந்தவுடன் ஒரு வாரத்தில் அவரது மகள் என கூறி ஒரு புகைப்படம் வைரலானது. பார்ப்பதற்கு அச்சு அசல் ஜெயலலிதா போலவே இருப்பதாகவும் கருத்துகள் உலா வந்தன.
இந்த நிலையில் தீயாய் பரவும் அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் மிருதங்க வித்வான் வீட்டின் குடும்ப புகைப்படம் என தெரியவந்ததை அடுத்து அந்த கட்டுக்கதை முடிவுக்கு வந்தது. இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மகன் எனக் கூறிக் கொண்டு ஈரோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் நீதிமன்றத்தில் சில ஆவணங்களை தாக்கல் செய்தார். அதில் தான்தான் ஜெயலலிதாவின் மகன் என்றும் தன்னை 1986 ஆம் ஆண்டு தத்து கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் சசிகலா மற்றும் தினகரனால் தனக்கு ஆபத்து என கூறிய அவர் தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கோரியிருந்தார். அவர் கொடுத்த ஆவணங்களை ஆராய்ந்ததில் அவை போலி என நிரூபணமானது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்புக்கு முடிவுக்கு வந்த நிலையில் மேலும் ஒரு பரபரப்பை பெங்களூருவை சேர்ந்த அமிர்தா என்ற பெண் அதே ஆண்டு கிளப்பினார்.
தான்தான் ஜெயலலிதாவின் மகள் என கூறி பெங்களூரை சேர்ந்த அமிர்தா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழக அரசியலில் பகீர் கிளப்பிய அம்ருதா தனியார் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் சொத்துக்காக தான் வழக்கு தொடரவில்லை என்றும் தான் ஜெயலலிதாவின் மகள் என்பது துணை முதல்வராக இருந்த ஓ பன்னீர் செல்வத்திற்கு தெரியும். சசிகலாவுக்கு பயந்துதான் தன்னை ஜெயலலிதா மறைத்தே வளர்த்து வந்ததாகவும் அவர் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த பிரச்சினை தற்போது ஆற போடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பிரேமா என்பவர் தான்தான் ஜெயலலிதாவின் மகள் என கூறிக் கொண்டு மெரினாவில் ஜெயலலிதாவின் சமாதியில் பேட்டி அளித்துள்ளார். அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது பின்வாசல் வழியாக போய் அவரை சந்தித்ததாகவும் அவருக்கு ஜெயலலிதா முத்தமிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னிடம் உள்ள ஆதாரத்தை விரைவில் சமர்ப்பிப்பேன் என கூறியுள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது யாரும் உரிமை கோரவில்லை. அவர் இறப்புக்கு பின்னர் இது போல் ஆளாளுக்கு உரிமை கோருவது ஜெயலலிதாவின் ஆதரவாளர்களையும் நலம் விரும்பிகளையும் வேதனையடையச் செய்துள்ளது. மீடியா வெளிச்சம் தங்கள் மீது கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்ற பொய்களை கட்டவிழ்த்துவிடுகிறார்கள் என்கிறார்கள். உண்மையில் தன்னிடம் ஆதாரம் இருந்தால் வெளியிட்டு அதன் உண்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டியதை விட்டுவிட்டு தேவையில்லாமல் பேட்டி கொடுத்து தங்கள் மனதை புண்படுத்துவதாக ஜெயலலிதாவின் நலம் விரும்பிகள் ஆதங்கத்துடன் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications