தீராத வன்மம்.. ஜெயலலிதாவுக்கு பொன்முடியை கண்டாலே ஆகாது ஏன் தெரியுமா?
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு கிடைத்த சிறைத் தண்டனைக்கு ஜெயலலிதாவின் சாபமும், கோபமும் தான் காரணம் என புது தகவல் ஒன்று உலா வரத் தொடங்கியுள்ளது.
அப்படி பார்த்தால் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி, ஸ்டாலினை காட்டிலும் பொன்முடி மீது மட்டும் அப்படியென்ன அளவு கடந்த கோபம் இருந்திருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு விடையாக ஜெயலலிதாவை ''வாய்தா ராணி'' என விமர்சிக்கத் தொடங்கி அதிகளவில் அந்த வார்த்தையை 2006-2011 காலக்கட்டத்தில் மேடைக்கு மேடை உச்சரித்து விமர்சித்தவர் பொன்முடி தான் என்றும் இதனால் அவர் மீது அன்றே ஜெயலலிதாவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது எனவும் காரணம் கூறப்படுக்கிறது.

இதனால் தான் அதிமுக ஆட்சியில் பொன்முடி மீது சட்ட ஓட்டைகளில் இருந்து அவர் எந்தக்காலத்திலும் தப்ப முடியாதவாறு மிக ஸ்ட்ராங்காக வழக்குப் பதியப்பட்டதாகவும் அதனால் தான் பொன்முடி இப்போது தூக்கம் இழந்து தவிக்கிறார் எனவும் அதிமுகவின் சீனியர்கள் சிலரே கூறுவதாக ஒரு தகவல் உலா வருகிறது. அதேபோல் கருணாநிதியை விமர்சித்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்ட போதெல்லாம், கருணாநிதி சார்பில் ஜெயலலிதாவுக்கு பொன்முடி தான் பதில் அறிக்கை வெளியிட்டு பதிலடி கொடுத்ததாகவும் அப்போது அவர் பயன்படுத்திய சில வார்த்தைகள் ஜெயலலிதாவை கடும் கோபம் கொள்ளச் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் தான் சி.வி.சண்முகத்தை திண்டிவனத்திலிருந்து விழுப்புரத்திற்கு மாற்றி சீட் கொடுத்து பொன்முடியை 2011 தேர்தலில் ஜெயலலிதா வீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் சி.வி.சண்முகம் வசம் சட்டத்துறை இருந்ததால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகும், பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் ஜரூராக மேல்முறையீடு செய்து இந்தளவுக்கு வழக்கு டைட் செய்யப்பட்டதாகவும் அதனால் தான் இப்போது பொன்முடியால் வழக்கிலிருந்து தப்ப முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.
எது எப்படியோ பொன்முடிக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனையை அவரால் கட்சியில் பாதிக்கப்பட்ட திமுகவினர் சிலரே திரைமறைவில் கொண்டாடுகிறார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிய வருகிறது. விழுப்புரம் மாவட்ட திமுக என்றாலே பொன்முடியின் முகம் தான் நினைவுக்கு வரும் வகையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்முடியை பொறுத்தவரை சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு எதிராக பலமுறை நேருக்கு நேர் குரல் எழுப்பியிருக்கிறார். அதுமட்டுமல்ல விவாதங்களின் போது சற்று கடுமையாக கோபம் கொப்பளிக்க பேசக்கூடியவர். இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் கடந்த காலங்களில் ஜெயலலிதாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெயலலிதாவிடம் மட்டுமல்ல ஆளுநர் ரவி அண்மையில் சட்டசபையிலிருந்து வெளியே சென்ற போது, பொன்முடியின் உடல் மொழியும் அவர் உதிர்த்த வார்த்தைகளும் ராஜ் பவனை கொதிப்படைய வைத்தது. இதனால் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டதா என்றால் இல்லை, அந்த விவாதத்திற்குள்ளும் நாம் செல்லவில்லை. பொன்முடியின் முன் கோபத்துக்கு இது போன்ற நிகழ்வை உதாரணமாக தான் இங்கே சொல்கிறோம்.












Click it and Unblock the Notifications