ஹைகோர்ட் அனுமதி... சென்னையில் ஜெ. நினைவு இல்லம் இன்று திறப்பு- ஜரூர் ஏற்பாடுகள்!
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்த நிலையில் சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு இல்லம் இன்று திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சுகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் உள்ளது. இதனை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதற்கு இழப்பீடு என ரூ68 கோடியை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியது. இதற்கு எதிராக ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா, தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க அனுமதி வழங்கியது. இருப்பினும் வழக்கு முடியும்வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை என உத்தரவிட்டிருந்தது.
புதன்கிழமை மாலை இந்த உத்தரவு வெளியான உடனேயே போயஸ் கார்டன் வேதா இல்லத்துக்கு அதிகாரிகள் விரைந்து சென்றனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு திறப்பு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவகம் புதன்கிழமை காலை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு வேதா இல்லம், ஜெயலலிதா நினைவு இல்லமாக திறக்கப்படுகிறது.