1 லட்சம் ஓட்டு வித்தியாசம் என்பார்கள்.. நம்பாதீங்க.. ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனின் மறைமுக மெசேஜ்!
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்களுக்கு மறைமுக மெசேஜ் கொடுத்துள்ளார் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓரங்கட்டப்பட்ட பூங்குன்றன், சமூக வலைதளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார். இந்நிலையில், லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தலைவர்களுக்கு மறைமுக மெசேஜ் கொடுக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் பூங்குன்றன்.

பூங்குன்றன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "என்னுடைய அரசியல் அனுபவத்தில் பல்வேறு நிகழ்வுகளை கேட்டதுண்டு. பல்வேறு நிகழ்வுகளை நேரிலே பார்த்ததுண்டு. அம்மாவுடன் பயணித்த போது நான் சொன்ன நல்லதைக் கேட்டு பலருடைய வாழ்வு உயர்ந்ததும் உண்டு, கேட்காததால் தாழ்ந்ததும் உண்டு.
ஒரு அரசியல்வாதி தேர்தலில் நிற்கிறார் என்றால் அவரைச் சுற்றி பாராட்டுவதற்கும், ஜால்ரா போடுவதற்கும் ஒரு பெரிய கூட்டமே இருக்கும். வேட்பாளரிடம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணன் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்பார் ஒருவர். அண்ணன் நீங்கள் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் என்பார் மற்றொருவர். உங்களை வேட்பாளராக அறிவித்த பிறகு மக்கள் எல்லாம் உங்கள் பக்கம் திரும்பிவிட்டார்கள், நீங்கள் மகத்தான வெற்றி பெற போகிறீர்கள் என்பார் இன்னொருவர்.
இப்படியெல்லாம் அவரை உசுப்பேத்தி உசுப்பேத்தி அவரை வெற்றி பெற்றதாகவே நினைக்க வைத்து விடுவார்கள். நடப்பவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டு இருப்பான் ஒரு விசுவாசி. அவன் தயங்கி தயங்கி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வேட்பாளரிடம் சென்று அண்ணா தப்பா எடுத்துக்காதீங்க. இவங்க சொல்றதெல்லாம் கேட்காதீங்க. ரொம்ப சிரமமாக இருக்கு. நம்ம கவனமா செயல்பட்டால் தான் வெற்றி பெறமுடியும் என்று சொல்வார். வேட்பாளர் அவரை அலட்சியமாக பார்ப்பார். உடனே பக்கத்தில் இருப்பவர்கள் அவனை வசைபாடத் தொடங்குவார்கள்.
உண்மையைச் சொன்ன விசுவாசியை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். ஒதுக்கப்பட்டாலும் வேட்பாளருக்காக தேர்தலில் உயிரைக் கொடுத்து வேலை செய்வார் அந்த விசுவாசி. தேர்தலில் அந்த வேட்பாளர் தோற்றுவிடுவார். அவருக்கு அப்போதுதான் நினைவுக்கு வருவான் அந்த விசுவாசி. உடனே அவனை கூப்பிடச் சொல்லுவார். தன் குடும்பத்தினரிடம், அவன் ஒருவன்தான் உண்மையைச் சொன்னான் என்பார். அவன் ஓடிவந்து அந்த வேட்பாளரை பார்க்கும்போது, 50 ஆயிரம் ஓட்டுகள், ஒரு லட்சம் ஓட்டுக்கள், மக்கள் உங்கள் பக்கம் திரும்பிவிட்டார்கள் என்று சொன்னவர்கள் எல்லாம் வெற்றி பெற்றவர்களிடம் சென்று சேர்ந்திருப்பார்கள். இதுதான் அரசியல் நடைமுறை.
இதற்கு எத்தனையோ பேரை நான் எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும். நானே இவ்வாறு பலரிடம் தகவல் சொல்லி வெற்றி பெற்றவர்களும் உண்டு, கவனக்குறைவால் தோற்றவர்களும் உண்டு. ஒன்றை மட்டும் நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும். அந்த விசுவாசி, வேட்பாளரிடம் நீங்கள் தோற்கப் போகிறீர்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் கவனமாக இருந்தால்தான் வெற்றி பெறமுடியும் என்று சொன்னார். இதை சரிவர புரிந்து கொள்ளாமல் அவனை வசைபாடியவர்கள் பலர். விசுவாசி சொன்னதை வேட்பாளர் கேட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார். வியூகங்களை மாற்றிக் கொண்டிருந்தால் ஜெயித்திருப்பார். பயனடைந்து உடன் இருப்பவர்களுக்குத் தெரியாமல் உண்மையானவர்களை கலந்தாலோசிப்பதே வெற்றிக்கான வழி!
அதுபோல உங்களோடு இருப்பவர்களை வசைபாடாமல், எதிர்க்கட்சிகளை வசைபாடத் தொடங்கினாலும் அது வெற்றிக்கு உங்களை அழைத்துச் செல்லும்..!
அரசியலில் உண்மையைச் சொல்வதற்கு தான் தைரியம் வேண்டும். எதையும் எதிர்பார்க்காமல் கழகத்தை நேசிப்பவனால் தான் அவ்வாறு நடந்து கொள்ளமுடியும். உண்மை கசக்கத்தான் செய்யும். என்ன செய்ய! கசப்பான மருந்தை உட்கொண்டால்தானே நோய் குணமாகும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications