இத கவனிச்சீங்களா? மீண்டும் ஜெயலலிதா.. இனியும் அவர்தான் நிரந்தர பொதுச்செயலாளர்
சென்னை: ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பதால், ஜெயலலிதாவே அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஆகியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகள், போராட்டக்கங்களை கடந்து கடந்த 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூடியது. அதில் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அனைவரும் எதிர்பாத்ததைபோல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.

தொடர் நீக்கம்
அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலரையும் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். இதற்கு பதிலடி தரும் வகையில் ஓ.பன்னீர்செல்வமும் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு
இந்த நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ஐகோர்ட் உத்தரவு
இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வெளியிட்டு உள்ளது. அதில் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுகூட்டம் செல்லாது என்று தெரிவித்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், இருவரும் இனி தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர்
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து உள்ள இந்த அதிரடி உத்தரவின் மூலமாக 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாமல் போயுள்ளது. குறிப்பாக கடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளராக தொடர்வார் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 11 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டதும் செல்லாது. இதன் காரணமாக ஜெயலலிதாவே மீண்டும் நிரந்தர பொதுச்செயலாளராக தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications