ராத்திரியில் துணை முதல்வர் ஒபிஎஸ் மகன் ஜெயபிரதீப் திடீரென வெளியிட்ட அறிக்கை!
சென்னை: என்னைப் பற்றிய அரசியல் சார்ந்த பதிவுகளில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகன் என்று குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னைப் பற்றிய அரசியல் சார்ந்த தங்களது பதிவுகளில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகன் மறறும் புதல்வன் என்று குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் எனது புகைப்படம் மற்றும் பெயரை என்னைவிட உயர் பதவியில் இருக்கும் தலைவர்களின் புகைப்படம் மற்றும் பெயரை விட பெரிதாக தெரியப்படுத்த வேண்டாம் என்றும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டிடம் இடிந்த விவகாரம்.. ஐ.ஐ.டி. குழு ஆய்வுக்கு வலியுறுத்தும் திமுக..!
விதிவிலக்காக இருக்கக்கூடாது
எனது குடும்பம் சார்ந்த பதிவுகளில் எனக்கு தந்தையாகவும், கழகம் சார்ந்த பதிவுகளில் எனக்கு தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நமது ஒருங்கிணைப்பாளர் என்பவர் நமது கழகத்திற்கும் தொண்டர்களுக்கும் பொதுவானவர். நான் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்கக்கூடாது.
என் தந்தையின் நற்பெயர்
எனது தந்தை அவர்கள் தற்போது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக , ஒரு மாபெரும் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், நான் பொதுவாழ்க்கைக்கு வந்த இந்த 21 ஆண்டுகளில் எனது தந்தையின் பெயர் மற்றும் அவருடைய அதிகாரத்தை அரசு நிர்வாகத்திலோ கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலோ நான் என்றைக்குமே எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியது கிடையாது.
விசுவாசமான தொண்டன்
என்றைக்கும் ஒரு தலைவனின் மகனாக என்னை நான் கருதியதில்லை. மக்கள் பணி செய்யும் ஒரு விசுவாச மிக்க ஓ பன்னீர்செல்வம் என்ற கழக தொண்டனின் மகனாகவே மனதளவில் என்னை நினைத்து பெருமைப்படுகிறேன்.
தொண்டனாக இருக்க விரும்புகிறேன்
இதயதெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சி தலைவவி அம்மா அவர்கள் வகுத்து கொடுத்த சட்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகளை பின்பற்றும் கழக தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்" இவ்வாறு ஜெயபிரதீப் கூறியள்ளார்.