"ரூ.41,000 கோடி!" எடப்பாடியின் அந்த 'சீக்ரெட்!' ஓபிஎஸ் நினைத்தால் அவ்வளவுதான்! ஜேசிடி பிரபாகரன் பரபர
சென்னை: எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் கூறியுள்ள கருத்துகள் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரே தொடர்ந்து குழப்பங்கள் அரங்கேறி வருகிறது. அதன் பின்னர் அதிமுக சில ஆண்டுகள் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரட்டை தலைமை கீழ் இயங்கியது.
ஆனால், அப்போதும் அதிமுகவால் பெரிய அளவில் எந்தவொரு தேர்தலிலும் வெல்ல முடியவில்லை, மக்களவை தேர்தல் தொடங்கி சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் தோல்வி தான்.

அதிமுக
இதனால் இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து அதிருப்தி நிலவியே வந்தது. இந்தச் சூழலில் திடீரென ஒற்றை தலைமை என்ற பேச்சு அதிமுகவில் சில மாதங்களுக்கு முன் எழுந்தது. ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இடையே சமமாகவே ஆதரவு இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சில நாட்களிலேயே பல நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் வந்தனர். இதன் காரணமாக ஜூலை மாதம் மீண்டும் பொதுக்குழு நடத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டனர். இருப்பினும், இந்த பொதுக்குழுவே செல்லாது என்று கூறி ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் எடப்பாடிக்கு ஆதரவாகவே தீர்ப்பு அளித்து உள்ளது. இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றம் சென்று உள்ளார். அந்த வழக்கிலும் விரைவில் தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒற்றை தலைமை
முன்பு கூட்டுத் தலைமைக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்த போதிலும், எடப்பாடி ஒற்றை தலைமை என்பதில் மிக உறுதியாக உள்ளார். இதன் காரணமாக இரு அணிகளும் தனித்தனியாகவே செயல்பட்டு வருகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடியையும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முன்னதாக சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி, கடந்த சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பன்னீர்செல்வமே காரணம் எனக் குற்றஞ்சாட்டினர்.

பதிலடி
மேலும், ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்புடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், ஓபிஎஸ்சுடன் தனியாகப் பேச முடியவில்லை என்றும் அவரது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகரன் அதிமுக ஒன்று சேரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்று குற்றஞ்சாட்டினார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஜே.சி.டி பிரபாகரன், அச்சம் அதிகரித்து உள்ளதால் தங்கமணி இப்படிப் பேசுவதாகவும் ஜெயக்குமாருடன் தங்கமணியும் பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டதாகவும் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகரன் தெரிவித்தார்.

41 ஆயிரம் கோடி
மேலும், எடப்பாடி பழனிசாமி தொடர்பாகவும் அவர் ஓப்பனாக எச்சரிக்கை விடுத்து உள்ளார். அதாவது எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய 41,000 கோடி ரகசியத்தை வெளியிட நேரிடும் என்று குறிப்பிட்ட ஜேசிடி பிரபாகரன், ஓபிஎஸ் அனுமதி அளித்தால் ரகசியத்தைப் பகிரங்கப்படுத்தத் தயார் என்றும் நவம்பர் 21-க்கு முன்பாகவே இந்த ரகசியத்தைப் பகிரங்கப்படுத்த உள்ளதாக ஜேசிடி பிரபாகரன் தெரிவித்து உள்ளார்.

அப்செட்
ஏற்கனவே நீதிமன்றங்களில் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது. அவர் தொடர்ந்து பல வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காததால் அப்செட்டில் உள்ளார் ஓபிஎஸ். இந்தச் சூழலில் இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஜேசிடி பிரபாகரனின் இந்தப் பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ரெய்டு
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டு குறித்து கோவை செல்வராஜ் கூறுகையில், "நாங்கள் கொடுத்த ஆதாரத்தின் அடிப்படையிலேயே இரு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதேபோல வெகு சீக்கிரம் மற்றவர்கள் மீதான ஊழல் பட்டியலையும் வெளியிடுவோம்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications